தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் அவர்கள், இன்று திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில், தன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஒரு வழக்கு குறித்த விவரம் விடுபட்டிருந்த நிலையில், திருச்சி வேட்புமனுவில் இரண்டு வழக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, அவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகச் சென்னை காவல்துறையினரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறாகக் கூட்டத்தைக் கூட்டியது போன்ற புகார்களின் கீழ் 5 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!
கடந்த ஆகஸ்ட் 2025-இல் மதுரையில் நடைபெற்ற தவெக-வின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது, மேடை அருகே வந்த ஒரு தொண்டரைப் பாதுகாவலர்கள் (Bouncers) தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல் நிலையத்தில் விஜய் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், மதுரை மாநாட்டுச் சம்பவம் குறித்த வழக்கைத் தெரிவிக்கவில்லை எனத் தகவல் வெளியானது. ஆனால், இன்று திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் இரண்டு வழக்குகளையும் விஜய் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், விஜய்யின் இந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. வேட்புமனுவில் தகவல் மறைக்கப்பட்டால் அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் புகார் அளிக்க வாய்ப்புள்ளதால், திருச்சி மனுவில் அவர் திருத்தம் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!