த.வெ.க.,வில் ‘புது வரவு’ ஆதிக்கமா? பழைய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து இணையும் முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவது, ஏற்கனவே கட்சியில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றிக்குப் பிறகு, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலருக்கு துணைப் பொதுச்செயலர், அமைப்புச் செயலர், மாவட்டச் செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், விஜய் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே கட்சிப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலர் மற்றும் மாவட்டச் செயலர் என கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!

இதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே அந்தப் பகுதிகளில் பொறுப்பு வகித்த சில நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதனால், புதியதாக இணைந்தவர்களுக்கும் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் இடையே எதிர்காலத்தில் அதிகாரப் போட்டி உருவாகுமோ என்ற அச்சமும் நிர்வாகிகள் மத்தியில் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் தொகுதிகளை உள்ளடக்கிய கட்சி அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்படுவது, ஏற்கனவே உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சிலர் கருதுகின்றனர்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த தலைவர்களை இணைத்துக்கொள்வது தேர்தல் அரசியலில் த.வெ.க.,வுக்கு பலமாக அமையலாம். அதே நேரத்தில், நீண்ட காலமாக கட்சியின் அடித்தளப் பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகளின் அதிருப்தி அதிகரித்தால், அது கட்சியின் உள்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இதனால், த.வெ.க.,வில் புதிய வரவுகளுக்கு பதவி வழங்கும் விவகாரம், வரும் நாட்களில் கட்சிக்குள் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே குடும்பம்… இருவேறு நடவடிக்கை..! கணவன் நீக்கம், மனைவிக்கு புதிய பொறுப்பு..! பரபரப்பு..!!