திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணந்தூரை சேர்ந்த 28 வயது சூர்யா ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்தார். அவரது மனைவி பிரின்சி இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் தாய் வீட்டுக்கு சென்றார். சூர்யா அவ்வப்போது குழந்தையை பார்க்க செல்வார். ஆனால் கடந்த டிசம்பர் 11-ம் தேதி பிரின்சியிடமிருந்து அதிர்ச்சி அழைப்பு வந்தது. "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்" என்று கூறிவிட்டு போன் வைத்துவிட்டார்.
ஆனால் மருத்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். சூர்யா அதிர்ந்து போனார். குழந்தை இயற்கை மரணம் அடையவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேசு மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். போலீசார் ஆழமான விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் உண்மை வெளியானது.
பிரின்சி கணவரை பிரிந்த பிறகு அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பெரியநாயகம் திமுக இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளவர். அவர் அடிக்கடி பிரின்சியை சந்திக்க அஞ்செட்டி வந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

இதையடுத்து அஞ்செட்டி போலீசார் பெரியநாயகத்தை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனமான அத்துமீறல் இது எனவும் தமிழகமே தலைகுனியும் அவலம் நிகழ்ந்துள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொடிய குற்றத்தைச் செய்த நபர், ஆளுங்கட்சியான திமுக-வின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்த 'பெரியநாயகம்' என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் எதையும் செய்யலாம், யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம் என்கிற மமதை கலந்த துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களே இத்தகைய இழிவான, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டதையே பறைசாற்றுகிறது என்றும் திமுக தொடர்பில் இருந்தால் எதையும் செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. எத்தனையோ போராட்டங்கள், சட்டங்கள் வந்த பின்பும், ஒரு பச்சிளம் குழந்தையைச் சிதைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது என்றும் இது வெறும் குற்றமல்ல., மனித இனத்திற்கே ஏற்பட்ட ஒரு தீராத கறை என்று சாடியது. இந்த வழக்கை உடனடியாக விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, எவ்வித அரசியல் சலுகையோ அல்லது காலதாமதமோ இன்றி, அந்தக் கயவனுக்கு உச்சபட்சத் தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!