சென்னை: தமிழகத்தில் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து த.வெ.க. அரசு புதிய திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மாநகராட்சிகளின் தற்போதைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அவற்றை கலைத்து, தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக த.வெ.க. இருந்தாலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் அந்த கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இல்லை. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் உள்ளாட்சி நிர்வாகங்களில் தி.மு.க.வின் அரசியல் செல்வாக்கு தொடர்வதாக த.வெ.க. தரப்பில் கருதப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வின் தாக்கத்தை குறைத்து, அடுத்த தேர்தலில் த.வெ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே ஆளுங்கட்சியின் நோக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளின் நிர்வாகத்துக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஆளுங்கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது. மாநகராட்சிகள் கலைக்கப்பட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது கட்சியின் அடுத்த முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளனர். மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், ஊழல் புகார்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து தேர்தலை சந்திக்க கட்சி தயாராகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், நகராட்சி துறை தொடர்பான டெண்டர் முறைகேடு புகார்களிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மாநகராட்சிகளை கலைப்பதற்கான முடிவு இறுதியாக முதல்வர் விஜயின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்குப் பிறகே எடுக்கப்படும் என்றும் த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா, அல்லது தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடியும் வரை தொடருமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தெளிவு ஏற்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!