தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) விருப்ப மனு வினியோகத்தை தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட உள்ளன.
த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். சென்னை பனையூர் அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும். விருப்ப மனு பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விஜய் அவர்கள் “நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்” என்று தொடர்ந்து அழுத்தமாக சொல்லி வருகிறார். எனவே பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களை விஜய் ஏற்கனவே தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது. ஆனால் மற்ற கட்சிகளைப் போலவே, கட்சி தலைமை விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி முறையாக செயல்படுத்துகிறது.
இதையும் படிங்க: தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!
ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் பெயரில் குறைந்தது 50 விருப்ப மனுக்களையாவது சேகரிக்க வேண்டும் என்று கட்சி தலைமை கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் ஏற்கனவே தொண்டர்கள் தங்கள் பெயரை முன்வைத்து பரிந்துரை பெற முயற்சி செய்து வருகின்றனர்.
த.வெ.க. தொடங்கியது முதலே விஜய் தனது கட்சியை மக்கள் நலனை மையமாகக் கொண்டு வளர்த்து வருகிறார். இப்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. விருப்ப மனு வினியோகம் தொடங்குவதால், கட்சியின் முதல் பெரிய தேர்தல் சோதனை தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு எப்படி நடக்கும், இறுதி பட்டியல் எப்போது வெளியாகும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கட்சி வட்டாரங்கள் கூறுவது: விஜய் தலைமையில் ஒற்றுமை மிக முக்கியம். எந்த தொகுதியிலும் பிளவு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை வலியுறுத்துகிறது. விருப்ப மனு பெறும் காலம் முடிந்த பிறகு, விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் த.வெ.க.வின் இந்த முதல் பெரிய தேர்தல் தயாரிப்பு, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப மனு வினியோகம் தொடங்குவதால் அடுத்த சில நாட்களில் கட்சியில் பரபரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!