தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்ததாகக் கூறினார்.

மாற்றம் எனப் பேசி வந்த ஆளும் அரசு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு திமுக அரசு அறிவித்த மானியத் திட்டத்தையே பெயர் மாற்றி அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட திட்டமோ, மானாவாரி விவசாயிகளுக்கான மானியத் திட்டங்களோ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார்.
இதையும் படிங்க: "வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திமுக ஆட்சியில் 77 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்துடன் இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் அதற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதாக அளித்த வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் ரத்து அல்லது நிவாரணம் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ex. அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்..!! ஆபாசமாக பேசிய வழக்கில் அதிரடி உத்தரவு..!!