அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கான எஃப்-1 கல்வி விசாக்கள் வழங்கல் கடந்த ஆண்டு (2025) ஜூன்-ஜூலை மாதங்களில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை தரவுகளின்படி, இந்த இரு மாதங்களில் இந்திய மாணவர்களுக்கு வெறும் 12,776 விசாக்களே வழங்கப்பட்டன. இது 2024-இன் அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட 41,336 விசாக்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 69 சதவீதம் குறைவாகும் – அதாவது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான எண்ணிக்கை.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இலையுதிர் கால படிப்புகள் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்குவதால், ஜூன்-ஜூலை மாதங்கள் விசா வழங்கலில் உச்சகட்டமாக இருக்கும். கொரோனா பிறகான ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது: 2021 ஜூன்-ஜூலையில் 40,194இலிருந்து 2022-இல் 62,229ஆகவும், 2023-இல் 72,027ஆகவும் அதிகரித்தது.

ஆனால் 2024-இல் ஏற்கெனவே சற்று குறைந்து 41,336ஆக இருந்த நிலையில், 2025-இல் இது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 2025-இல் 10,695 விசாக்கள் வழங்கப்பட்டு உச்சம் தொட்டன. ஆனால் ஜூலையில் 2,081ஆகவும், ஆகஸ்டில் 2,389ஆகவும் வெகுவாக சரிந்தன. ஒப்பீட்டுக்கு, 2024 ஜூன் மாதம் 26,731ஆகவும், 2023 ஜூன் 40,224ஆகவும் இருந்தன.
இதையும் படிங்க: இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!
இதே காலகட்டத்தில் சீன மாணவர்களுக்கான எஃப்-1 விசாக்களும் சுமார் 56 சதவீதம் சரிந்தன. இருப்பினும், 2025 ஜூன்-ஜூலையில் சீன மாணவர்களுக்கு 17,025 விசாக்கள் வழங்கப்பட்டன – இந்தியர்களை விட அதிகம். இது 2021க்குப் பிறகு முதல்முறையாக சீன மாணவர்கள் இந்தியர்களை முந்தியுள்ளது. 2023 ஜூன்-ஜூலையில் இந்தியர்களுக்கு 72,000க்கும் மேற்பட்ட விசாக்களும், சீனர்களுக்கு 42,854இலும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த சரிவுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளே முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது. 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபரான டிரம்ப், வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகளை அதிகரித்தார். மே மாத இறுதியில் மாணவர் விசா நேர்காணல்களை சில வாரங்களுக்கு நிறுத்தியது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜூன் 18 அன்றுதான் நேர்காணல்கள் மீண்டும் தொடங்கின.
மேலும், வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மே மாதத்தில் "சமூக ஊடக சரிபார்ப்பு மற்றும் பரிசோதனையை விரிவாக்க" காரணமாக புதிய அப்பாயிண்ட்மென்ட்கள் வழங்கப்படாது என அறிவித்தார். ஜூன் 23 அன்று இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை "பொது" (public) ஆக்க வேண்டும் எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து யூசர்நேம்களையும் குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தின.

சில பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நிதிகள் முடக்கப்பட்டன. பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அல்லது சட்ட வழக்குகளில் ஈடுபட்ட சர்வதேச மாணவர்களின் SEVIS பதிவுகள் திடீரென நீக்கப்பட்டன – பின்னர் வழக்குகளால் மீட்டெடுக்கப்பட்டன. இருப்பினும், 2024-25 ஆண்டில் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் 3.63 லட்சம் பேர் கொண்டு மொத்த சர்வதேச மாணவர்களில் 31 சதவீதம் பங்கு வகித்தனர் – சீனர்களை (23 சதவீதம்) முந்தி முதலிடத்தில் இருந்தனர்.
2023-24-இல் இந்தியர்கள் முதன்முறையாக சீனர்களை மிஞ்சியிருந்தனர்.ஆனால் தற்போதைய விசா சரிவால், பல இந்திய மாணவர்கள் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை மாற்று இடமாக தேர்வு செய்து வருகின்றனர். இது அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பொருளாதாரத்துக்கும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!