தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர்கள் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் விரைந்து நிரப்ப வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (RTI) பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்துத் தீர்வு காண்பதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் தாமதம் நிலவி வருகிறது. குறிப்பாக, மாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாக வைக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் தேக்கமடைந்து தங்கிப் போயுள்ளன. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையர் பதவி உட்படப் பல ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இதனால் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் புகார்கள் விசாரணையின்றித் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

இதனைத் தொடர்ந்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், "தகவல் ஆணையங்களில் பணியிடங்களைக் காலியாக வைப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் மற்றும் ஜனநாயகப் பண்புகளையே முடக்கிவிடும் செயலாகும்" எனக் குறிப்பிட்டது.
மேலும், தமிழ்நாடு அரசு தற்காலிகத் தாமதங்களைத் தவிர்த்து, காலியாக உள்ள மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கானப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அடுத்த 6 வாரங்களுக்குள் (6 Weeks) அனைத்து நியமனங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பெங்களூர், ஹைதராபாத் மாடலில் தமிழ்நாடு... ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? CM விஜய் கிரீன் சிக்னல்..!!