நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் கடந்த சில நாட்களாக கடுமையான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதி கிடைக்காமல் இழுபறி நீடித்து வந்தது. இதனால் 2 எம்.எல்.ஏ.க்களை கொண்ட விசிகவின் ஆதரவிற்காக தவெக காத்திருந்தது. நேற்று மாலையே முடிவை அறிவித்திருக்க வேண்டிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று மாலை முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகின. இன்று மாலை சரியாக விடுதலை சிறுத்தைகள் தலைமையகமான அம்பேத்கர் திடலில் திருமாவளவனை நேரில் சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதத்தை திருமாவளவன் வழங்கினார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 பேரின் ஆதரவையும் பெற்றது. இதில் எதிர்பாராத திருப்பமாக 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இதனையடுத்து ஒட்டுமொத்தமாக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன் என விஜயிடம் ஆளுநர் அர்லேகர் கறாராக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...!
தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் மட்டுமின்றி கூடுதலாக இரண்டு இடங்களின் ஆதரவையும் பெற்று 120 எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ.களின் ஆதரவு கடிதத்துடன் விஜய் 3வது முறையாக ஆளுநர் அர்லேகரைச் சந்திக்க சற்று நேரத்திற்கு முன்பு புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் கிண்டி சென்று கொண்டிருந்த விஜய் ஆளுநரை சந்திக்காமல், மீண்டும் தனது வீட்டிற்கே திரும்பி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று இரவு 7 மணிக்கு கேரளா செல்ல ஆளுநர் அர்லேகர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜயை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து விஜய் ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல் பாதி வழியிலேயே வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஆளுநர் தனது கேரள பயணத்தை ரத்து செய்ததோடு, விஜயை சந்திக்க மீண்டும் நேரம் கொடுத்ததாகக்கூறப்படுகிறது.
இதனையடுத்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்குச் சென்ற விஜய் மீண்டும் கிண்டி நோக்கி புறப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை ஆளுநர் அர்லேகரைச் சந்திக்கும் விஜய், அவரிடம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்கக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!