தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரையைத் திடீரென ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்திற்குத் தேவையான அனுமதிகள் கிடைத்துள்ள நிலையிலும், விஜய்யின் இந்தத் திடீர் மனமாற்றம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் திட்டமிட்டபடி ஏப்ரல் 14-ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவிருந்தார். இன்று காலை வெளியான தகவல்களின்படி, அந்தப் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சியின் மேலிடத்திலிருந்து இதற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்தல் வியூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அறந்தாங்கிப் பயணத்தை ரத்து செய்துள்ள விஜய், அதற்குப் பதிலாக அதே நாளில் தருமபுரியில் பிரம்மாண்ட ரோடு ஷோ (Road Show) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வட மாவட்டங்களில் தவெக-வின் செல்வாக்கை நிலைநாட்டவும், பாமக மற்றும் பிற கூட்டணிகளின் பலத்தை எதிர்கொள்ளவும் தருமபுரியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஜனநாயகன் கசிவை அரசியலாக்காதே! தவெக-விற்கு சரத்குமார் கண்டனம்!
சமீபகாலமாகப் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்யத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடமிருந்து அனுமதி கிடைக்கிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் விஜய் பல கூட்டங்களை ரத்து செய்து வருவது கட்சித் தொண்டர்களிடையே ஒருவிதக் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விடிந்தால் பிரச்சாரம் என்ற நிலையில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா? அல்லது ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பான சட்டப் போராட்டங்களில் அவர் பிஸியாக உள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத் தொண்டர்கள் விஜய்யின் வருகைக்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், இந்தப் பயண ரத்து அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: எல்லாரும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிவிட முடியாது! நடிகர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்!