தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஓஎம்ஆர் சாலை, காரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முக்கிய நிர்வாகிகளான அருண் ராஜ், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகளைப் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தொகுதி வாரியாக நேரடியாகக் கேட்டறிந்து வருகிறோம். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டுத் தலைவர் விஜய்யிடம் வழங்கப்படும். அவரின் விரிவான ஆலோசனைக்குப் பிறகே தவெக-வின் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள தெரு நாய் தொல்லை குறித்துப் பேசிய அவர், "இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தெரு நாய்களால் துரத்தப்பட்டு விபத்துக்குள்ளாவதை நாம் பார்த்து வருகிறோம். தவெக ஆட்சிக்கு வந்த 60 முதல் 70 நாட்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்" என அதிரடி உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!
மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தலைவர் விஜய் பிரத்யேகமான ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகப் பொங்கல் மற்றும் தீபாவளி விடுமுறைகளை முன்கூட்டியே கழித்துவிட்டு, முழுநேரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் தவெக-வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பான முறையில் அமையும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேகர்பாபுவின் ரவுடி அரசியல் இனி செல்லாது! தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆவேசம்!