திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் பிறந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை விவசாயி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மை சீடராகவும், "நமது நெல்லைக் காப்போம்" இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

நம்மாழ்வார் அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரையிலான விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றபோது, காட்டுயாணம் உள்ளிட்ட 7 பாரம்பரிய நெல் விதைகளைப் பெற்றார். இதிலிருந்து தொடங்கி, அழிவின் விளிம்பில் இருந்த 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை (சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி, இலுப்பைப்பூ சம்பா, பூங்கார், குடவாலை உள்ளிட்டவை) மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பரவலாக்கினார் நெல் ஜெயராமன்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தோற்றத்தில் மங்காத்தா..! இயக்குனர் வெங்கட் பிரபுவின் அட்ராசிட்டி ஸ்டார்ட்..!
2011ல் தமிழக அரசின் சிறந்த இயற்கை விவசாயி விருது, 2015ல் இந்திய அரசின் சிறந்த பாரம்பரிய மரபணு காப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மருத்துவ செலவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில், சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவிற்கான பணத்தை கட்டி வருகிறார்.

இதுகுறித்து இயக்குனர் இரா.சரவணன், தனது எக்ஸ் தளப் பதிவில், அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.

இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி… என்று கூறியுள்ளார்.
இயக்குனரின் இந்த பதிவு வைரலாக, பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கதை...! மகிழ்ச்சியில் எஸ்கே ரசிகர்கள்..!