தமிழ்நாடு அரசியலில் அதிமுக எப்போதும் உட்கட்சி மோதல்களுக்குப் பெயர் பெற்ற கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து வந்த பிளவுகளின் தொடர்ச்சியாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய உடைவு ஏற்பட்டது. இந்தப் பிளவு எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே உருவானது. தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பின்னணியில், கட்சியின் எதிர்காலம் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்தப் பிளவுக்கு வழிவகுத்தன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் முதலமைச்சரானார். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி இரண்டாக உடைந்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது அதிமுகவின் உட்கட்சி மோதலை பகிரங்கமாக்கியது.
ஈபிஎஸ் தரப்பு உடனடியாக வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோரை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கியது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்தன. வேலுமணி தரப்பினர் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஈபிஎஸ் தரப்போ, கட்சி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறினர். இந்தப் பிளவு அதிமுகவை இரு அணிகளாகப் பிரித்தது.
இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

இதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டு அணிகளும் இணைந்தன. இருப்பினும் தனக்கு பதவி தேவையில்லை என்று எஸ் பி வேலுமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கடிதம் கொடுத்து இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட கட்சி பொறுப்பில் அவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வேலுமணியின் கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கையில் எஸ்.பி
வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருந்தது. அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என்று வேலுமணி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய எஸ் பி வேலுமணி, தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி நீக்கி வருவதாக குற்றம் சாட்டினார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிமுக தலைமைக்கு எதிராக தக்க காலத்தில் தகுந்த முடிவெடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!