75 வயதான ராஜேஷ், சீரியல் மற்றும் சினிமாவில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து தனக்கான ஒரு இடத்தை பெற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். கடந்த 2000 மாவது ஆண்டில் 'அழுக்கு வேட்டி' என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார் ராஜேஷ், அதனைத் தொடர்ந்து 'சவுக்கடி' என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு 2001ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அலைகள்' என்ற சீரியலில் 'கிருஷ்ணா' என்ற கேரக்டரில் பலரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றவர்.

இப்படிப்பட்ட நடிகர் ராஜேஷ், சமீபத்தில் துபாய் சென்று இருக்கிறார். அங்கு உணவு, தண்ணீர் என எதுவுமே அவருக்கு செட் ஆகவில்லை. அதனால் மிகவும் முடியாமல் தான் இந்தியா வந்திருக்கிறார். மேலும் அலைச்சல் காரணாமாகவும் பல டென்ஷன் காரணமாகவே திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதற்காகவும் பல அலைச்சல்களில் இருந்துள்ளார். ஆனால் தனது மகனின் திருமணத்தை பார்க்காமலே உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டார் என பலரும் வருத்தம் தெரிவித்து வரும் வேளையில், சனிக்கிழமையான இன்று அதிகாலை நடிகர் ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கானது இன்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என்பதால் பல திரைபரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன், அவரது மகன் மற்றும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சரத்குமாரை வம்புக்கு இழுத்த சீமான்... நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய சுப்ரீம் ஸ்டார்!!

இந்த சூழலில், பல திரைபரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கூல் சுரேஷ், " நான் நடிகர் ராஜேஷ் சாருடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் கடந்து சில வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி அவார்ட் பங்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எனக்கு அவார்டை வழங்கியதே ராஜேஷ் சார் தான். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு அவரை தனியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுது அவரிடம், சார் அவார்டு என்பது தொலைக்காட்சி எங்களுக்கு கொடுத்தது. ஆனால் உங்களது நினைவாக எனக்கு ஏதாகிலும் ஒன்றைக் கொடுங்கள் என கேட்டேன். உடனே பதறி போன அவர் என்னிடத்தில் தற்பொழுது எந்த விதமான பரிசுகளும் இல்லை புத்தகங்கள் கூட இல்லை என சொல்லிவிட்டு, தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு சென்றார். அதனை நினைவு கூர்ந்தால் எனக்கு இப்பொழுதும் அழுகையாக வருகிறது.

ஏனெனில் அந்தப் பேனா என்பது அவருடைய எத்தனை புத்தகங்களை எழுதி இருக்கும், அந்த பேனாவை எனக்கு அவர் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது வாழ்க்கையில் நான் பார்த்த, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத அன்புடன் பேசக்கூடிய அறிவுரை வழங்க கூடிய ஒரு உன்னதமான மனிதன் என்றால் அது ராஜேஷ் சார் மட்டும் தான். அதிகமாக ஜோதிடத்தின் மீது நாட்டம் கொண்டவர். மேலும் நடிகர் ராஜேஷ் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அந்த புத்தகத்தில் 'அவருடைய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களது வீட்டிற்கு ராஜேஷ் சார் சென்று இருந்தாராம். பின்பு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவரை காக்க வைத்ததால் கோபத்துடன் வீடு திரும்பி விட்டாராம்.

ஆனால் அவர் பத்திரிக்கையை கொடுக்கவில்லை என்றாலும் ராஜேஷ் சாரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழையா விருந்தாளியாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வந்து கலந்து கொண்டு, ஏன்? இரண்டு மணி நேரம் தாமதம் ஆக்கினேன் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அதில், உன்னை நான் காக்க வைத்ததற்கு காரணம், நீ பத்திரிகை கொண்டு வந்த நேரம் ராகு காலம் என்பதாலும், ஜோதிடத்தில் நாட்டம் உள்ளவர் என்பதாலும் மனதை சங்கடமாக்க கூடாது என்பதற்காக தாமதப்படுத்தினேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் எல்லாரிடமும் நட்பில் இருந்த இவர் தற்பொழுது மரணித்திருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

இப்படி எல்லாருடனும் நட்பில் இருந்தவர், அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான நாட்டில் இருந்தார், இப்பொழுது உள்ள விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, அல்லது திமுக, பாமக, பாஜக என அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்பில் இருந்தவர். படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரு நேர்மையான நம்பிக்கைக்குறிய மனிதர். ராஜேஷ் சார் உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அது மட்டுமல்லாமல், என்னதான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரு தந்தைக்கு கனவு என்றால் தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து பேரன் பேத்திகளை கண்களில் பார்த்து மகிழ்வது தான் அந்த பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் ஆறாம் தேதி என கேள்விப்பட்டேன். ஆனால் அதற்கு முன்பாக அவரது ஜீவன் பிரிந்து இருப்பது மனதுக்கு வேதனை அளிப்பதாக இருந்தாலும் அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" என கூறி சென்றார்.
இதையும் படிங்க: நாதக தலைவர் சீமானை மேடையில் கலாய்த்த கூல் சுரேஷ்..! சிம்புவை அடுத்த உலகநாயகன் என உசுப்பேத்தி அட்ராசிட்டி..!