நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் தக் லைஃப் பட சர்ச்சை தற்பொழுது கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் முதலில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், "நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது சகோதரன் மறைவுக்கு பின் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இதனால் அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்று ஆபரேஷன் செய்தனர். ஆப்ரேஷன் முடிந்த சமயத்தில் நடிகர் கமலிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்த இரண்டே வார்த்தையில் என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன்.

உண்மையில் ஹீரோ என்றால் கமல் மாதிரி தான் இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்து இருப்பேன். இதனை நான் பலமுறை உங்கள் மத்தியில் கூறியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். அதற்கு அப்பா இவன் என் மகன் என்றார். அப்போது நான் கமலை பார்த்து ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. ஏனெனில் கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்" என்றார்.
இதையும் படிங்க: 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகைக்கு புற்றுநோயா...! வருத்தத்தில் ரசிகர்கள்..!

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர்.

மேலும், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம் என எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு பதிலளித்த கமல் "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி பிரச்சனை குறித்து பேச அரசியல் வாதிகளுக்கு தகுதியும் கிடையாது. தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்ப்பதில்லை.. ஆனால் அரசியல் எதிர்பார்க்கும்" என கூறி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அவரை தொடர்ந்து தற்பொழுது தனது சவுக்கடி கேள்வி பதிலால் பலரது வாயை அடைத்துள்ளார் நடிகர் சிவராஜ்குமார். அதன்படி அவர் பேசுகையில், "நான் அன்று சொன்னதுபோல் தான், எப்போழுதுமே நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகன் தான். எல்லா இக்கட்டான சூழலிலும் அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நம்ம கர்நாடகாவை குறித்து அவர் என்னிடத்தில் மிகவும் பெருமையாக மட்டுமே பேசி இருக்கிறார். உண்மையிலேயே அவர் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் பேசியதை தான் அனைவரும் இங்கு பெருமையாக பேசி இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு எதற்க்காக கன்னட மொழி பற்றி பேசுகிறார்கள். முதலாவது அவர் நடித்த பட விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததே எவ்வளவு பெருமையான விஷயம் தெரியுமா.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் கர்நாடகாவிற்கு வந்திருந்தார். அப்போதே இதனை குறித்து அவரிடத்தில் கேட்டிருக்கலாம். ஆனால் இங்கு உள்ள ஒருவர் கூட இந்த மொழி பிரச்சனை குறித்து அவரிடத்தில் கேட்கவில்லை. அப்படி நீங்கள் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதற்க்குண்டான விளக்கத்தை கொடுத்து இருப்பார். அனால் நீங்கள் ஏன் அப்பொழுதே கேட்கவில்லை. எனக்கு புரியவில்லை யாராவது ஒருவர் ஏதாகிலும் பேசிவிட்டால் மட்டும் எங்கிருந்து தான் உங்களது கன்னட மொழி பாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள் என்று. இந்த பாசம் அப்பப்போ வரக்கூடாது. எப்போதுமே இருக்க வேண்டும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டும் மொழியை கொண்டாடாதீர்கள்.

அதுமட்டுமல்ல சிலர் கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று பெருமை பாடுவது சரியல்ல. சரி.. இப்படி மொழி பற்றை குறித்து பேசும் நீங்கள் அனைவரும் கன்னட சினிமாவுக்காக இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? இதுவரை புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? சொல்லுங்கள். உங்களது மனசாட்சி உறுத்தவில்லையா. உண்மையில் கமல் ஹாசன் மட்டுமே கன்னட சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறார். எப்பொழுதுமே அனைவரையும் மதிக்கக்கூடிய நல்ல குணம் படைத்த திரைக்கலைஞர் என்றால் அது அவர்தான். இப்படிப்பட்டவர் எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க நினைக்கவே மாட்டார். உண்மையில் என் மேல் உள்ள அதீத பாசத்தில் அவர் பேசியதை எடுத்துக்கொண்டு அனைவரும் தவறாக சித்தரித்து பேசி வருகிறீர்கள் " என ஆவேசமாக பேசி சென்றார்.
இதையும் படிங்க: தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!