பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியானதை அடுத்து, பல ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் அதிகாலை வேளையிலேயே வெளிநாடுகளில் படங்கள் வெளியானதால் அங்கு படம் பார்த்த ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தை பார்த்த சிலர், " உண்மையிலேயே இது கமலஹாசன் திரைப்படமா? அல்லது சிம்புவின் திரைப்படமா? என ரசிகர்களை கொழும்பும் அளவிற்கு படம் படுமாஸாக உள்ளது என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல்களை குறித்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்படி செக்கச்சிவந்த வானத்தில் பிரகாஷ்ராஜ் இறப்புக்குப் பின்பு மூன்று மகன்களும் அந்த சீட்டைப் பிடிக்க அடித்துக் கொள்கிறார்களோ அதே போலத்தான் இப்படத்திலும் நடக்கிறது. இப்படி இருக்க படத்தின் கதைகளை குறித்து கீழே பார்ப்போம்.
இதையும் படிங்க: தக் லைஃப் ரிலீஸ் நேரத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ..! படத்தின் காட்சிகள் அதில் இடம்பெற்றதால்...?

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படிப்பட்ட திரைப்படத்தின் கதைக்களம் என பார்த்தால், " வழக்கம்போல நடிகர் கமலஹாசனுடைய கேங்கிற்கும் சட்டத்தை காப்பாற்றுகின்ற போலீசுக்கும் இடையே நடக்கும் தகராறில் பாவம் பரிதாபமாக நடிகர் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார். இப்படி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த நடிகர் சிம்பு, அந்தத் தகராறில் தான் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்ட தனது சகோதரியும் தொலைத்து விட்டு பிரிந்து செல்கிறார்.

இப்படி 'ஜில்லா' திரைப்படத்தில் நடிகர் விஜயை எடுத்து மோகன்லால் வளர்க்கிறாரோ அதேபோல, தந்தை இழந்து பரிதாபமாக நிற்கும் சிம்புவை எடுத்து வளர்க்கிறார் நடிகர் கமலஹாசன். கமலஹாசன் சொல்லும் அனைத்து விஷயங்களையும் தட்டாமல் செய்கின்ற நடிகர் சிம்புவை தனது கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்திற்கு தலைவனாகவும் இளவரசனாகவும் அறிவிக்கிறார் கமல். அந்த நேரத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் வருவதைப் போலவே நடிகர் கமலஹாசன் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வர, அந்த சமயத்தில் தன்னுடைய இடத்தை பிடிக்க சிம்பு தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என கமலஹாசன் தீர்க்கமாக நம்புகிறார்.

இதனை அறிந்து மனம் உடைந்து போன சிம்பு தன்னை இத்தனை வருடங்களாக வளர்த்த தனது தந்தையே இப்படி நினைத்து விட்டாரே என மனம் சோர்ந்து அவர் மீது வைத்த மொத்த நம்பிக்கையும் இழந்து போகிறார். வழக்கம்போல இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாசர், பகவதி, ஜோஜூ ஜார்ஜ் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி சிம்புவினுடைய கைகளாலே கமலை கொள்ள வகை தேடினர். அவர்களது திட்டம் போட்டபடியே, சிம்பு அவரை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை கீழே தள்ளிவிட பாவம் கமலஹாசன் பரிதாபமாக இறந்து விடுவார். அவ்வளவுதான் இதற்குப் பின்பு தான் கதையே சூடுபிடிக்க ஆரம்பித்தது.

நாம் அனைவரும் ட்ரெய்லரில் பார்த்ததைப் போல கமல் இறந்து விட்டார் என்று கூறி 'இனிமேல் நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்' என சிங்கம் கர்ஜிப்பதை போல் கர்ஜித்து கமலின் இடத்தை சிம்பு பிடிக்கிறார். இதனை அடுத்து நடிகர் கமலஹாசன் உயிரோடு வருகிறாரா? இல்லையா" தனது இடத்தை பிடிக்கிறாரா? இல்லையா? அல்லது தன்னை மலையிலிருந்து தள்ளிவிட்ட சிம்புவை பழிவாங்குவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் மீதி கதையாக உள்ளது.

இப்படிப்பட்ட படத்தைக் குறித்து அலசி பார்த்தால் சில குறைகளை சொல்லத்தான் தோன்றுகிறது... அதன்படி பார்த்தால் இத்திரைப்படத்தில் நடிகை திரிஷாவை எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பதே புரியாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் படத்தின் பாதி கதைகள் முழுவதும் பொறுமையாகவே செல்வதால் எப்பொழுதுதான் விறுவிறுப்பு காட்சிகள் வரும் என்று நம்மை நினைக்கத் தோன்றுகிறது. மேலும், மணிரத்தினம் கமலஹாசன் படம் என்பதால் எமோஷனல் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் என நினைத்தால் எமோஷனல் காட்சிகள் அந்த அளவிற்கு பெரியதாக கனெக்ட் ஆகவில்லை.. அதுமட்டுமல்லாமல் வசனங்களும் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை....

சரி ஏ.ஆர்.ரகுமானின் இசையிலாவது படம் பயங்கரமாக செல்லும் என்று பார்த்தால் அவருடைய இசையும் இத்திரைப்படத்தை முழுமையாக கைவிட்டு உள்ளது. என்ன நடந்ததோ என்று தெரியவில்லை ஆனால் படத்தில் 'முத்த மழை' பாடல் இல்லாததால் அப்பாட்டை விரும்பி நேசித்தவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். மொத்தத்தில் கமலஹாசனுக்காகவும் சிம்புவுக்காகவும் இத்திரைப்படத்தை காணலாம்.
இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!