திரையுலகில் அனைவரது அன்பை பெற்ற நடிகர் ராஜேஷ், அவரது மகனின் திருமணத்தை பார்க்காமலே உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டார் என பலரும் வருத்தம் தெரிவித்து வரும் வேளையில், இன்று அதிகாலை அவரின் மகள் கனடாவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கானது இன்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என்பதால் பல திரைபரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன், அவரது மகன் மற்றும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், "சில நேரங்களில் இவரை போன்ற நல்ல மனிதர்களை எதற்காக கடவுள் சீக்கிரமாக எடுத்துக் கொள்கிறார் என்ற கேள்வி தான் என் மனதில் தோன்றுகிறது. முதலில் அவர் ஒரு மனிதன், அதற்கு பின்பு சிறந்த நடிகர், அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் எங்கள் அனைவருக்கும் பெரிய தூணாக இருந்தவர். உண்மையில் நடிகர் ராஜேஷ் நடமாடும் என்சைக்ளோபீடியா என்றே கூறலாம். தனது வயதிலிருந்து கீழே இறங்கி வந்து அனைவரிடமும் பேசக்கூடிய தன்மை படைத்தவர். அவரிடத்தில் அரசியல், விஞ்ஞானம், ஆன்மிகம் என எதைக் குறித்து வேண்டுமானாலும் கேட்கலாம் அது அத்தனைக்கும் சரியான பதிலை தன் கையில் வைத்திருப்பார்.
இதையும் படிங்க: விஷால் தன்ஷிகாவுக்கு காதல் கல்யாணம்..! விதை போட்டது டீ.ஆர் தான்..!

சில நேரங்களில் அவர் கூறுவதை நாங்கள் எழுதிக் கூட வைத்து விடுவோம். அந்த அளவிற்கு ஞானம் படைத்தவர். இன்று அவர் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவில் அவரும் இருப்பார் என்று நினைத்தோம். அதுமட்டுமல்லாமல் இன்னும் நான்கு நாட்களில் அவரது மகனுக்கு நிச்சயதார்த்தம் இருக்கும் வேளையில் அவர் மரணம் எனக்கு சோகத்தை அளிக்கிறது" என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், " பழைய வரலாற்றைக் கடத்தும் ஒரு பாலமாகவும் வரலாற்று ஆசிரியராகவும் நடிகர் ராஜேஷ் எங்களுக்கு இருந்திருக்கிறார். புரட்சித் தலைவர், நடிகர் திலகம், ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடைய காலத்திலும் பயணித்த நிகழ்வுகளை கோர்வையாக சொல்வார். அதனைக் கேட்க எங்கள் மனதிற்கு ஆறுதலாகவும் வியப்பாகவும் இருக்கும். அவரிடம் எதைக் குறித்து கேட்டாலும் அதனைப் பற்றி தெளிவாக சிரித்த முகத்துடன் கூறுவார். என்னதான் அவர் ஆசிரியராக இருந்தாலும் அவர் பேச ஆரம்பிக்கும் பொழுதே இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை நம்மிடம் தூண்டக்கூடியவர். அவருடைய இழப்பை எப்படி ஈடு செய்வோம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருப்பினும் அவரிடம் பெற்ற அறிவை நாங்கள் காலத்திற்கும் வாழ வைப்போம். அவரை இழந்து வாடும் அவருடைய மகன், மகள், நண்பர்கள், குடும்பத்தார் என அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பாக்யராஜ், "என்னதான் நடிகர் ராஜேஷ் ஆசிரியராக இருந்து சினிமாவிற்கு வந்தாலும், இங்கும் ஒரு ஆசிரியராகவே நடந்து கொண்டார். ஒரு விஷயம் நமக்கு குழப்பமாக இருக்கிறது என்று நினைத்து அவருக்கு போன் செய்தால் உடனே அதை குறித்து தெளிவான விளக்கத்தை நமக்கு கொடுப்பார். ஒருவேளை நாம் கேட்டது அவருக்கு தெரியவில்லை என்றாலும் கூகுளில் இருந்தோ புத்தகங்களில் இருந்தோ அதனை உடனே பார்த்து நமக்கு தெளிவான விளக்கத்தை கொடுக்கக் கூடியவர். சினிமாவில் கீழிலிருந்து மேல் வரைக்கும் உள்ள அனைவரிடமும் பழகி நல்ல பெயரை சம்பாதித்த உன்னதமான மனிதன். முதல் முதலில் ராஜ் கீரன் படத்தில் அவர் நடித்திருந்தாலும் இன்று வரை அந்த நட்பையும் அந்த நன்றி உணர்வையும் அவர் காப்பாற்றி வந்தார் என்றே சொல்லலாம். அவர் சினிமாவில் இருந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தார் அதிலும் நல்ல பெயரை சம்பாதித்தார். அப்படி பட்ட மனிதனை இன்று பிரிந்திருப்பது சொகத்தையே அளித்துள்ளது என தெரிவித்தார்.

இன்று மாலை நடிகர் ராஜேஷ் அவர்களின் இறுதி அஞ்சலி என்பதால் பல திரைபிரபலங்கள் அவரது இல்லத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஷால் என்ன குழந்தையா... காதலி முன்பாக காதலனை பங்கம் செய்த ராதா ரவி..!