‘கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படம் என்றாலே எதிர்பார்ப்பு எவ்வளவு இருக்கும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. அதிலும் ‘டாக்சிக்’ படத்தின் அறிவிப்பு முதல் வெளியான ஒவ்வொரு போஸ்டர், டீசர், டிரெய்லர் என அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து யாஷின் மான்ஸ்டர் மைண்ட் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படம், ஹாலிவுட் தரத்திலான பிரம்மாண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
கீது மோகன்தாஸ் சொன்ன ஒரு விஷயத்தை நம்பி, யாஷ் தன்னை முழுமையாக இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த விதம் உண்மையிலேயே மலைக்க வைக்கிறது. உடல் தோற்றம் தொடங்கி கதாபாத்திரத்தின் மனநிலை வரை தனது பங்களிப்பை யாஷ் முழுமையாக கொடுத்திருப்பது திரையில் தெளிவாக தெரிகிறது. ஆனால், யாஷுக்கு கொடுத்த வாக்குறுதியை இயக்குநர் கீது மோகன்தாஸ் முழுமையாக திரையில் மெய்ப்பித்தாரா? என்பதுதான் படம் பார்த்து முடித்த பிறகு எழும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
டிரெய்லரை பார்த்தபோது ‘கோட்’ போன்ற ஒரு மாஸ் ஆக்ஷன் உலகமா, அல்லது முற்றிலும் வேறொரு பாணியில் உருவாக்கப்பட்ட படமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் படம் தொடங்கிய பிறகு எதிர்பாராத வகையில் வேறு ஒரு பாதையில் செல்கிறது. சில இடங்களில் பிரம்மிக்க வைக்கிறது; சில இடங்களில் ‘அந்நியன்’ படத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு மனநிலை சார்ந்த அணுகுமுறையை எடுத்துக்கொள்கிறது. ஆனால் அந்த அணுகுமுறை முழுமையாக ரசிகர்களை சென்றடைந்ததா என்றால், அது பெரிய கேள்விதான். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் ஒன்றுமே இல்லாத ஒரு சிறுவன் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை ஆளும் நிலைக்கு செல்வது போல, ‘டாக்சிக்’ படத்திலும் ராயா என்ற கதாபாத்திரம் ஒரு மிகப்பெரிய உலகத்துக்குள் நுழைகிறது.
இதையும் படிங்க: பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கோவாவில் கதை தொடங்குகிறது. அநாதைகளாக மாறும் ராயா மற்றும் அவரது அக்கா கங்கா இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. தனது தம்பி ஒருநாள் இந்த ஊரையே ஆள வேண்டும் என்பதே கங்காவின் ஆசை. ராயாவாக யாஷும், கங்காவாக நயன்தாராவும் நடித்துள்ளனர். சால்வடோர் என்ற மிகப்பெரிய கேங்ஸ்டரின் உலகத்திற்குள் ராயா நுழையும் தருணத்திலிருந்து கதை வேகம் எடுக்கிறது. சால்வடோரிடம் இருந்து தப்பிக்க முயலும் சூழலில் ராயா காட்டும் அறிமுகமே ரசிகர்களுக்கு யாஷின் மாஸ் இமேஜை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கல்லறை பகுதியில் வரும் யாஷின் என்ட்ரி காட்சியில் அவர் எதிரிகளை அடித்து வீழ்த்தும் விதம் ரசிகர்களுக்கு தேவையான மாஸ் தருணத்தை கொடுக்கிறது. அதே சமயம் நயன்தாராவும் சண்டைக் காட்சிகளில் பங்கேற்று தனது கதாபாத்திரத்தை வெறும் ஹீரோவின் அக்கா என்ற அளவில் மட்டும் நிறுத்தாமல் இருக்கிறார். சால்வடோரின் உலகத்திற்குள் ராயா நுழைந்த பிறகு, அவனது வாழ்க்கை முழுமையாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் ராயா, சால்வடோருடன் இணைந்து அபின் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். ஆனால் இந்த உறவு அவ்வளவு எளிதாக தொடரவில்லை. சால்வடோரின் மனைவிக்கு ராயா மற்றும் கங்கா இருவருமே பிடிக்கவில்லை. குடும்பத்திற்குள் ஏற்கனவே இருக்கும் அதிகாரப் போட்டியுடன் ராயாவின் வருகையும் சேர்ந்து பிரச்சனையை அதிகரிக்கிறது.
இதற்கிடையில் சால்வடோர் தனது மகள் ரெபேக்காவை ராயாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ரெபேக்கா கதாபாத்திரத்தில் தாரா சுதாரியா நடித்துள்ளார். இதுவரை ஒரு கேங்ஸ்டர் கதையாக சென்று கொண்டிருந்த படம், பின்னர் ராயாவின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல், குடும்பம் என பல்வேறு திசைகளில் பயணிக்கிறது. சர்க்கஸ் கலைஞராக நாடியா கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி படத்துக்குள் வருகிறார். நாடியாவை பார்த்ததும் ராயாவுக்கு காதல் ஏற்படுகிறது. இருவருக்குமிடையேயான உறவு அடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலையில், அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக ராயாவும் நாடியாவும் பிரிய வேண்டிய நிலை உருவாகிறது.
அதோடு நாடியா மூலம் கிடைத்த தனது வாரிசையும் ராயா இழக்கிறார். மறுபுறம் ரெபேக்காவுடனான திருமண நிகழ்விலும் மிகப்பெரிய வன்முறை வெடிக்கிறது. அந்த சம்பவத்தில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, ராயா தனது அக்கா கங்காவையும் இழக்கும் சூழல் வருகிறது. ஒருவருக்கொருவர் என தனது சொந்தங்களை இழந்து நிற்கும் ராயாவின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ராயாவின் வாழ்க்கையில் மெல்லிசா கதாபாத்திரம் மூலம் மீண்டும் ஒரு மாற்றம் வருகிறது. மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள இந்த கதாபாத்திரம் ராயாவுக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கிறது. மனைவி, மகன் என ஒரு குடும்ப வாழ்க்கை உருவாகும் நிலையில், கடந்த காலத்தின் பிரச்சனைகள் மீண்டும் அவரை தேடி வருகின்றன.
அந்த சூழலில் தனது மனைவியையும் மகனையும் ராயா காப்பாற்றினாரா? அவரது கடந்த காலம் மீண்டும் அவரது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது? என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதியாக மாறுகிறது. ‘டாக்சிக்’ படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது யாஷ்தான். அவரது உடல் அமைப்பு, நடை, பார்வை, குறிப்பாக குடிபோதையில் இருப்பது போன்ற கண்கள் என கதாபாத்திரத்திற்காக அவர் செய்திருக்கும் உடல் மற்றும் நடிப்பு உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது. யாஷ் திரையில் தோன்றும் பல காட்சிகள் தனியாகவே படத்தை தாங்கி நிற்கின்றன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்மொழி ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.
‘கே.ஜி.எஃப்’ படங்களில் பார்த்த அதே மாஸ் ஹீரோ இமேஜை மட்டும் பயன்படுத்தாமல், மனரீதியாக சிக்கலான ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்த அவர் முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. யாஷுக்காக மட்டுமே ஒருமுறை இந்தப் படத்தை பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. யாஷைத் தாண்டி நயன்தாரா மற்றும் கியாரா அத்வானிக்கும் படத்தில் நடிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது. நயன்தாராவின் கங்கா கதாபாத்திரம் தொடக்கத்தில் வலுவாக அமைந்துள்ளது. தம்பியின் வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்படும் காட்சிகள் நன்றாக உள்ளன.

கியாரா அத்வானிக்கும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் சில பகுதிகளில் அதிகப்படியான படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகாமல் போகின்றன. ஒரு கதாபாத்திரத்தின் காதல் மற்றும் இழப்பு பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக பாதிக்க வேண்டுமென்றால், அந்த உறவுக்கான போதுமான நேரமும் ஆழமும் திரைக்கதையில் தேவை. ஆனால் இங்கு சில இடங்களில் அந்த உணர்வு முழுமையாக உருவாகவில்லை. இரண்டாம் பாதியில் ராயா மற்றும் டிக்கெட் இடையேயான காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த காட்சிகளில் இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது கதை சொல்லும் திறனை சிறப்பாக பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. கதாபாத்திரங்களின் மனநிலை, கடந்த காலத்தின் தாக்கம், குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ராயாவின் எண்ணம் ஆகியவை ஒன்றாக சேரும் இடங்கள் படத்தின் சிறந்த பகுதிகளில் அடங்கும்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதல் பாதி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையாததால், இரண்டாம் பாதியில் வரும் நல்ல காட்சிகளின் தாக்கமும் குறைந்து விடுகிறது. முதல் பாதியிலேயே கதையுடன் பார்வையாளர்கள் முழுமையாக ஒன்றிணைந்திருந்தால், இரண்டாம் பாதியின் உணர்ச்சிகளும் இன்னும் வலுவாக வேலை செய்திருக்கும். ‘டாக்சிக்’ படத்தின் மிகப்பெரிய பிளஸ் அதன் புரொடக்ஷன் வேல்யூ. படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. லொகேஷன்கள், காஸ்டிங், செட் அமைப்புகள், ஆக்ஷன் காட்சிகள் என தயாரிப்பாளர்கள் பணத்தை வாரி இறைத்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் பனிமலை காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன.
இந்தக் கதையை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்ததால்தான் திரையில் இத்தகைய பிரம்மாண்டத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்பது புரிகிறது. ஹாலிவுட் தரத்தில் ஒரு கேங்ஸ்டர் உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற படக்குழுவின் முயற்சி பாராட்டுக்குரியது. விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர், தனிஷ் பக்சி, ஃபஹீம் அப்துல்லா மற்றும் அர்சியான் நிஜாமி ஆகியோர் இசை மற்றும் பாடல்களில் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக பின்னணி இசை பல ஆக்ஷன் காட்சிகளுக்கு தேவையான மாஸ் உணர்வை உருவாக்குகிறது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, படத்தின் பிரம்மாண்டத்தையும் யாஷின் கதாபாத்திரத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பெரிய லொகேஷன்களையும், ஆக்ஷன் காட்சிகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை படத்தின் மிகப்பெரிய குறைகளில் ஒன்று டப்பிங். சில இடங்களில் தமிழ் டப்பிங் ஏதோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை டப்பிங் கலைஞர்கள் வாசிப்பது போலவே இருப்பதாக தோன்றுகிறது. வசனங்கள் இயல்பாக காதில் விழாமல், மொழிபெயர்க்கப்பட்ட உணர்வை கொடுப்பதால் முதல் பாதியிலேயே படத்துடன் ஒன்றிணைவது சிரமமாகிறது. ஒரு பான் இந்தியா திரைப்படத்திற்கு டப்பிங் என்பது மிகவும் முக்கியமான அம்சம். குறிப்பாக கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் வசனங்களின் மூலம் வெளிப்படும் பட்சத்தில், மொழியின் இயல்புத்தன்மை இன்னும் முக்கியமாகிறது.
இங்கே அந்த விஷயம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. படத்தின் மனநிலை சார்ந்த அணுகுமுறை சில இடங்களில் ‘அந்நியன்’ படத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் அந்த பாணி கதையுடன் முழுமையாக இணைந்து பயணிக்கிறதா என்றால், பல இடங்களில் சந்தேகம் ஏற்படுகிறது. ‘டாக்சிக்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரங்களின் மனநிலையை காட்ட வேண்டும் என்பதற்காக, பார்வையாளர்களுக்கும் அந்த டாக்சிக் மனநிலையை அதிகமாக கடத்திவிட்டார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குநர் காட்டிய கவனத்தையும் உழைப்பையும் முதல் பாதியிலும் செலுத்தியிருந்தால், படம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும். ‘டாக்சிக்’ ஒரு பிரம்மாண்டமான படம்; ஆனால் பிரம்மாண்டம் மட்டுமே ஒரு படத்தை முழுமையான அனுபவமாக மாற்றிவிடாது.
யாஷின் நடிப்பு, புரொடக்ஷன் வேல்யூ, ஆக்ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு மற்றும் சில இரண்டாம் பாதி காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம். அதே நேரத்தில், முதல் பாதியின் தடுமாற்றம், உணர்வுப்பூர்வமான கனெக்ஷன் குறைவு, தமிழ் டப்பிங்கின் செயற்கைத்தன்மை ஆகியவை படத்தின் வேகத்தை பாதிக்கின்றன. கீது மோகன்தாஸ் ஒரு பெரிய கேங்ஸ்டர் உலகத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆனால் அந்த உலகிற்குள் பார்வையாளர்களை முழுமையாக அழைத்துச் செல்வதில் திரைக்கதை சில இடங்களில் தவறுகிறது. யாஷ் தனது பக்கத்தில் எந்த குறையும் வைக்கவில்லை.

அவரது அர்ப்பணிப்புக்கும் நடிப்புக்கும் முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஆனால் இயக்குநர் முதல் பாதியையும் இரண்டாம் பாதியைப் போலவே கவனமாக செதுக்கியிருந்தால், ‘டாக்சிக்’ இன்னும் உயரமான இடத்தை அடைந்திருக்கும். மொத்தத்தில்: யாஷுக்காக பார்க்கலாம்; பிரம்மாண்டத்திற்காக ரசிக்கலாம்; ஆனால் முழுமையான கேங்ஸ்டர் அனுபவத்தை எதிர்பார்த்து செல்பவர்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: இன்று ‘டாக்சிக்’ ரிலீஸ்..!! படம் ரசிகர்களுக்கு பிடிக்கணுமாம்.. So தர்மஸ்தலா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய யாஷ்..!