நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் மாயமாகியுள்ளனர். திபெத் எல்லைப் பகுதியில் இருந்து போத்தே கோசி ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம், ரசுவா மாவட்டம் உள்ளிட்ட வடக்கு எல்லைப் பகுதிகளை நிலைகுலையச் செய்தது. கிராமங்கள், வீடுகள், வாகனங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.
இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்பை இழந்துள்ளனர்.தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். மூன்று பேருந்துகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு பேருந்தில் பயணித்த சுமார் இருபது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய இரு பேருந்துகளில் பயணித்தவர்களின் நிலை குறித்து தெளிவான தகவல் இல்லை.வெள்ளம் சாலைகளைத் துண்டித்ததால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணியில் நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்களுடன் களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தூதரகம் இணைந்து பயணிகளின் விவரங்களைச் சேகரித்து மீட்புப் பணியை ஒருங்கிணைத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடன் செய்திக்காகக் காத்திருக்கின்றனர். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த சோகம் பல குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதால் மேலும் விவரங்கள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!