கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு தனது 17 வயதில் கன்னடத்தில் மகாகவி காளிதாஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற இவர், அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து 1959ல் இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் நடித்தார்.

சரோஜா தேவி கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டு அந்த மொழி படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். அவர் நடித்த பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அனைத்து படங்களும் அவருக்கு வெற்றியை தான் கொடுத்தன.
இதையும் படிங்க: ஜெ. கையில் கலைமாமணி விருது.. நடிகர் பாண்டியராஜனின் பாட்டி மறைவு.. திரைப் பிரபலங்கள் இரங்கல்..!
இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சரோஜா தேவியின் கோபால் வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று என்றே கூறலாம். மேலும் இவர் 1969 இல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, 1992 இல் பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். பல அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி.
இந்நிலையில் 87 வயதான சரோஜா தேவி, வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் பெங்களூருவில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு இந்திய சினிமா உலகிற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

சரோஜா தேவியின் நடை, உடை, கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ் மக்களை கவர்ந்தாலும், அவருடைய கண்களுக்கு தான் ரசிகர்கள் ஏராளம். அந்த கண்களில் மை வைத்து அவர் உருட்டி உருட்டி பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட கண்களை இறந்ததும் தானம் செய்ய சரோஜாதேவி எழுதி வைத்துள்ளாராம். இதையடுத்து பெங்களூரில் உள்ள நாராயணா நேத்ராலயா மருத்துவமனையின் கண் வங்கியில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் சென்றனர். 87 வயதை கடந்த சரோஜா தேவியின் கண்கள் நல்ல நிலையில், பிறருக்கு பொறுத்த ஏதுவாக உள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அந்த கண்கள் நாளை 2 குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு கொடிகேஹள்ளி தோட்டத்தில் கணவர் ஹர்ஷாவின் சமாதி அருகே சரோஜா தேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘செல்ல மகனே’ என்று அழைக்கும் இன்னொரு தாய்.. சரோஜா தேவி மறைவுக்கு உலக நாயகன் இரங்கல்..!