உலக நாயகன், ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் கமல்ஹாசன். 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், நடனம், பாடகர் என பல அவதாரங்களில் கலக்கியுள்ளார். இப்போதும் பிஸியான ஹீரோவாக நடித்து வரும் கமல், கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மற்றும் இயக்கிய திரைப்படங்கள் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. அவரது முக்கியமான படங்களில் நாயகன், தேவர் மகன், விஸ்வரூபம், மற்றும் ஹே ராம் ஆகியவை அடங்கும்.

சினிமாவில் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த இவர், திடீரென அரசியலில் களமிறங்கி, 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்மூலம் தமிழ்நாட்டில் அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது பன்முகத் திறமைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் அவரை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய ஆளுமையாக ஆக்கியுள்ளன.
இதையும் படிங்க: என்ன வார்த்தை சொல்லிட்டாருய்யா..!! 'தக் லைஃப்' படத்திற்காக மணிரத்னம் சொன்ன அந்த சொல்..!
இந்நிலையில் ஆஸ்கார் விருது பெறும் படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதனை பிரபல தொகுப்பாளர் கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசனைப் போன்று உலகம் முழுவதும் 534 புதிய திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கார் படங்களைத் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கார் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஆஸ்கார் நாமினேஷன் படங்களைத் தேர்வு செய்வார்கள், மேலும் வெற்றியாளர்களையும் இந்தக் குழு தேர்வு செய்யும்.

கமல்ஹாசனுக்கு கிடைத்த இந்த உயரிய கௌரவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், "ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர்.

அவரது புத்திசாலித்தனம் மற்றும் பன்முகத் திறமையின் மூலம் நடிகராக, கதைச்சொல்லியாக, இயக்குநராக இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தலைவன் தலைவி" ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..? அசத்தலாக வெளியிட்ட படக்குழு..!