சமீப காலமாக பெண்கள், சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுத்து கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிறுமிகள், பெண்களை தாண்டி தற்போது மூதாட்டிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்களின் போதை பழக்கம் தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி மணிமேகலை மாலை நடைப்பயிற்சிக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சவுக்கு தோப்பிற்கு மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வாயில் மண்ணை கொட்டி அமுக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள், அவரது காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.
இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்களிடம் ரத்த காயங்களுடன் கூட்டு பாலியல் கொடூரத்தில் இருந்து மீண்ட மூதாட்டி, தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்தையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வர வைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குற்றவாளிகள் காடாம்புலியூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று, பதுங்கியிருந்த எஸ்கே பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரை, தப்பியோட முயற்சித்தபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுந்தரவடிவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடைம் பேசிய அவர், 80 வயது மூதாட்டி சீரழிக்கப்பட்ட சம்பவத்தில், அது கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது, ஒருவர் மட்டுமே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று எஸ்.பி ஜெயஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!