ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு அடங்கிய 95 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபையும் இதற்கு ஒப்புதல் அளித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை புதன்கிழமை 95 பில்லியன் டாலர் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்தை நிறைவேற்றியது. இதில் பெரும்பாலான நிதி, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக பெண்டகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா 216–214 என்ற குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனிமேல் கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஈரான் பணத்தில் இருந்து இழப்பீடு... டிரம்பின் அதிரடி அறிவிப்பு!
ஏற்கனவே, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஹெக்செத், செனட் விசாரணையின்போது, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளுக்காக இதுவரை 37.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அப்போதே இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும், தற்போது பிரதிநிதிகள் சபை இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கோரப்பட்டுள்ள நிதியில், ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு 73 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், டிரம்பின் "Save America Act" திட்டத்திற்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில், நாடு முழுவதும் புதிய வாக்காளர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்தல் தொடர்பான திட்டங்களுக்கு கூடுதலாக 10 பில்லியன் டாலர் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது எழும் முக்கியமான கேள்வி, ஈரான் தொடர்பான போர் தொடருமா? என்பதுதான். தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து, ஈரானில் உள்ள ராணுவ மையங்கள், ட்ரோன் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11 இரவுகளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த தாக்குதல்கள் இத்துடன் நிற்காது என்றும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு வசதிகள் உள்ள பிகாக்சே மவுண்டைன் பகுதியில் விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், உலக பொருளாதாரத்தின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ குவிப்பும் தாக்குதல்களும் தொடரும் என்றும் வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜோர்டான் மற்றும் ஈராகில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஈரான் ஆதரவு தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பார்க்கும்போது, அமெரிக்கா தற்போதைக்கு போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்பதும், கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!