வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் கட்டிய லுங்கியுடன் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தார். தற்போது அவர் இந்தியாவில்தான் வசித்து வருகிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைத் தடை செய்து விட்டது. வங்கதேசத்தின் விடுதலைக்காகப் போராடிய இக்கட்சியைத் தடை செய்ததை அக்கட்சி ஏற்கவில்லை என்று அறிவித்தது.

என்றாலும் அவாமி லீக் கட்சியின் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனையடுத்து அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை வங்கதேச காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் முன்னாள் அதிபருமான அப்துல் ஹமீது வெளிநாட்டுக்கு திடீரென தப்பியுள்ளார். அப்துல் ஹமீது கட்டிய லுங்கியுடன் டாக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவோடு இரவாக தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதைப் போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து, அப்துல் ஹமீதின் பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், முகமது அப்துல் ஹமீத், சகோதரருடன் மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ளார் என்றும் அவருடைய அரசியல் எதிரிகள் தப்பியோடி விட்டதாகத் தவறாக சித்தரிக்கின்றனர் என்றும் அவாமி லீக் கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கட்டிய லுங்கி, சக்கர நாற்காலியில் இருந்தபடியே செல்வது தெரிகிறது. இப்படம் வங்கதேச அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் ஹமீது 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை வங்கதேசத்தின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் நெருக்கடி: கைலியுடன் நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர்..!
இதையும் படிங்க: கருப்பையில் இறந்த குழந்தை..! பாவத்திற்கு பரிகாரம்... இந்து மதத்திற்கு மாறிய வங்கதேச இஸ்லாமிய பெண்..!