பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அதன் படி, பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள், ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் பயணத்தை முடித்த அவர்கள், இத்தாலி சென்றடைந்தனர்.தலைநகர் ரோமில் அந்நாட்டு வெளியுறவு விவாரம் மற்றும் பாதுகாப்பு கமிட்டிக்கான செனட் தலைவர் ஸ்டெபானியா கிராக்சி, நம் எம்பிக்களை வரவேற்றார்.
இதையும் படிங்க: உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த ஸ்மார்ட் மூவ்... AMCA திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!!
ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான பாஜ எம்பிக்கள் புரந்தேஸ்வரி, சமிக் பட்டாச்சார்யா, சிவசேனா உத்தவ் கட்சி எம்பி பிரியங்கா சதுர்வேதி, காங்., எம்பிக்கள் குலாம் அலி கட்னா, அமர் சிங், துாதரக அதிகாரி பங்கஜ் சரண் உள்ளிட்டோருக்கு இத்தாலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதில் நடந்த கொடூர கொலைகள், மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பு, அவர்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாகிஸ்தான் ராணுவம், அவர்களை ஆதரிக்கும் பாக்., அரசு ஆகியவை குறித்து, இத்தாலி அரசு பிரிதிநிதிகளிடம் விளக்கினோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் பல வரவேற்றுள்ளன. இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும் என, இத்தாலி பிரிதிநிதிகளிடம் வலியுறுத்தினோம்.தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா சந்திக்கும் சவால்கள், பயங்கரவாதத்தால் உலக நாடுகளின் வளர்ச்சியில் ஏற்படும் முட்டுக்கட்டைகள் ஏராளம்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், தொடர்ந்து இரட்டை வேடம் போடுகிறது. உலகளாவிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர இத்தாலியும் துணை நிற்க வேண்டும். இந்திய எம்பிக்களின் பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தாலியும் அதே நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறேன் என்றார். தொடர்ந்து அந்நாட்டு அரசு பிரதிநிதிகள், அங்கு வசிக்கும் இந்தியர்கள், முன்னாள், இந்நாள் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை நம் எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!