நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் செல்கின்றனர்.
ஆக்ஸியம் ஸ்பேஸ், ஸ்பேஸ் எக்ஸ், நாசா ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இஸ்ரோ உள்ளிட்ட சர்வதேச கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் ஆக்ஸியம் 4 விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆக்ஸியம் 4 மேற்கொள்ளப்போவது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு பயணம் மட்டுமல்ல, தனியார் விண்வெளி பயணம், அரசு விண்வெளி நிறுவனங்களுக்கு ஈடானதா என்ற சோதனையும் கூட.
இதையும் படிங்க: இந்தியாவின் 101வது ராக்கெட்.. இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் தோற்றது எப்படி?

மே 29ம் தேதி புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஜூன்8 ல் கிளம்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பிரச்னை சரி ஆகாததால் 2வது முறையும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு உள்ள நிலையில், வரும் 10ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
28 மணிநேர பயணத்திற்கு பின் ஜூன் 11ல் அவர்கள் விண்வெளி நிலையத்தை அடைவார்கள். அங்கு 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடுவார்கள். ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின் முக்கிய பைலட் ஆக சுபான்ஷு சுக்லா இருப்பார்.

இவர், இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானி. ஆராய்ச்சியாளரும் கூட. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு கட்டுரைகளின் இணை ஆசிரியராக பணியாற்றியவர்.
வேற்றுக்கிரகங்களில் மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இருந்தார். இப்போது சர்வதேச விண்வெளி நிலைய ஆய்வுக்கு செல்ல உள்ளனர். 1984ல் இந்தியாவின் ராக்கேஷ் ஷர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். அதன் பின் விண்வெளிக்கு செல்லப்போகும் 2வது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லப்போகும் முதல் இந்தியரும் சுபான்ஷு சுக்லா தான்.

இதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷூ சுக்லா கூறும்போது, 'ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன்.
விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை, இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக உள்ளது. விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள், ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்த பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச்செல்கிறேன் என சுபன்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை கிளம்புகிறது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்.. இன்று தொடங்கியது கவுண்டவுன்..!