ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்து வரும், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
உலகத் தேவைகளில் 20 சதவீதம் கச்சா எண்ணெயை இந்த நீரிணை வழியாகத் தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, அந்த நீரிணையை ஈரான் அரசு மூடுவதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை என்பது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழியாகும். ஹார்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. ஓமன் வளைகுடா அரபிக்கடலுடன் இணைகிறது. எனவே, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், திறந்த கடலை அடைய ஹோர்முஸ் நீரிணையை நம்பியுள்ளன. இந்த நீரிணை, ஈரான் மற்றும் ஓமனின் பிராந்திய நீர் எல்லைக்குள் அமைந்துள்ளது. மேலும், இது உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஈரான்-இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு செக்..?
இந்த நீரிணை மிகவும் அகலமானது இல்லை. அதன் குறுகிய இடத்தில் 33 கி.மீ. மட்டுமே அகலம் கொண்டது. மேலும், கப்பல் பாதையின் அகலம் இரு திசைகளிலும் 3 கி.மீ. மட்டுமே உள்ளது. இது நீரிணையை மூடுவதையோ அல்லது கடந்து செல்லும் கப்பல்களை தாக்குவதையோ எளிதாக்குகிறது.

இதன், முக்கிய காரணம் எண்ணெய் தான். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) கூற்றுப்படி, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோர்முஸ் நீரிணை வழியாக சென்ற கச்சா எண்ணெய், உலகின் மொத்த கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பகுதிக்கும் அதிகமாகவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்காகவும் இருந்தது. கூடுதலாக, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (முக்கியமாக கத்தாரில் இருந்து) 2024 ஆம் ஆண்டில் இந்த நீரிணை வழியாக கடந்து சென்றது.
அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்று வழி இல்லை. எனவே, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால், உலகளாவிய எண்ணெய் மற்றும் LNG வர்த்தகத்தில் பெரும் தாக்கங்கள் ஏற்படும், மேலும், விலையும் கடுமையாக உயரும். எண்ணெய் விலைகளில் ஏற்படும் எந்த மாற்றம் பல பொருட்களின் விலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்தவொரு போர் அல்லது மோதலின் போதும் ஈரான் இந்த நீரிணையை இதுவரை மூடியது இல்லை. 1980களில், ஈரான்-ஈராக் போரின் போது, இரு நாடுகளும் நீரிணை வழியாக சென்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், போக்குவரத்தை நிறுத்தவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்த நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராச்சி, ஹோர்முஸ் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "ஈரான் வசம் பல்வேறு திட்டங்கள் உள்ளன" என்று சுருக்கமாகத் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஹோர்முஸ் நீரிணையை மூட வேண்டாம் என்று ஈரானை வலியுறுத்துமாறு சீனாவை வலியுறுத்தினார். "சீனா, தங்கள் எண்ணெய் தேவைகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளது. அதை மூடினால், அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்து" என்று ஃபாக்ஸ் நியூஸில் ரூபியோ கூறினார்.
இதையும் படிங்க: ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க.. தண்டனைக்கான நேரம் வந்துருச்சு.. காமெனி மிரட்டலால் குலை நடுங்கும் அமெரிக்கா..!