பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மனிதநேயமற்ற தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக முன்மொழியப்பட்ட உடன்படிக்கையை இஸ்ரேல் - ஹமாஸ் நிராகரித்துள்ளதால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்பது போங்கு! இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்.. ட்ரம்ப் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்..!