மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன. காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்பது போங்கு! இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்.. ட்ரம்ப் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்..!

இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்பை விட மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகளை தாண்டி பல நட்பு நாடுகளும் கூட இஸ்ரேலுக்கு எதிராக போர் கொடி தூக்கின.

இருப்பினும் இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக அமெரிக்கா இருந்தது. காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பது டிரம்ப் வகுத்து கொடுத்த திட்டம் தான். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகவும் இந்த விவகாரம் திரும்ப துவங்கியது. இந்த நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய முகமது சுலைமான் (வயது 45) என்ற நபரை கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று போலீசார் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது. இதனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதனை எப்.பி.ஐ., இயக்குனர் காஷ்படேல் உறுதி செய்தார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள சசி தரூர் தலைமையிலான மத்திய அரசு குழுவினர், கொலரோடோ தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், 'கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்த செய்தியை இந்திய எம்.பி.,க்கள் குழு கேள்விபட்டது. எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. நமது மண்ணில் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியிடம் உறுதியாக தெரிவித்துள்ளோம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2000 கி.மீ பாய்ந்து அடித்த இஸ்ரேல்.. சின்னா பின்னமான சனா விமான நிலையம்.. ஹவுதி பயங்கரவாதிகளுக்கு செக்..!