மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன. காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
இதையும் படிங்க: 2000 கி.மீ பாய்ந்து அடித்த இஸ்ரேல்.. சின்னா பின்னமான சனா விமான நிலையம்.. ஹவுதி பயங்கரவாதிகளுக்கு செக்..!

இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்பை விட மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகளை தாண்டி பல நட்பு நாடுகளும் கூட இஸ்ரேலுக்கு எதிராக போர் கொடி தூக்கின.

இருப்பினும் இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக அமெரிக்கா இருந்தது. காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பது டிரம்ப் வகுத்து கொடுத்த திட்டம் தான். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகவும் இந்த விவகாரம் திரும்ப துவங்கியது. சமீபத்தில் சவுதி மற்றும் வளைகுடா நாடுகளுக்கு டிரம்ப் சென்றிருந்தார். அங்குள்ள முஸ்லிம் நாடுகளும் போரை நிறுத்தும் படி டிரம்பிடம் வலியுறுத்தின. இதை தொடர்ந்து அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் பேசி ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தன.

அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கின் சிறப்பு தூதர் விட்காஃப் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். காசாவை கைப்பற்றியே தீருவோம் என்று களம் இறங்கிய இஸ்ரேல் வேறு வழி இன்றி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக அறிவித்தது. ஹமாசை ஒழிக்காமல் போரை நிறுத்த மனம் இல்லை. இருப்பினும் பிணைக்கைதிகளின் குடும்பத்தினர், உறவினருக்காக தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

இன்னும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேல் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து விடும் என்றே தெரிகிறது. அதே போல் ஹமாஸ் கையிலும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. போரை முழுமையாக நிறுத்தும் அம்சம் அதில் இல்லை என்று ஹமாஸ் குற்றம் சாட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஹமாசுக்கு வேறு வழி இல்லை. எனவே அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது.

அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் உயிருடன் இருக்கும் 10 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதே போல் இறந்த பிணைக்கைதிகள் 18 பேரின் சடலங்களை வழங்க வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 125 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு சிறை பிடிக்கப்பட்ட 1111 காசா மக்கள் மற்றும் இறந்த 180 பாலஸ்தீனியர்கள் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
கூடவே காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள் படிப்படியாக பின் வாங்கும். இடைப்பட்ட காலத்தில் பேச்சு வார்த்தை தொடரும் என்பது தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும். காசாவில் இருந்து பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெற வேண்டும். காசாவில் வசிக்கும் மக்களுக்கு உதவி பொருட்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால் பிணை கைதிகள் 10 பேரை விடுதலை செய்வோம். மேலும் உயிரிழந்த பிணைக்கதிகள் 18 பேரின் உடலை அனுப்பி வைப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் படையினரின் பதிலை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க: முகமது சின்வார் கதையை முடிச்சிட்டோம்.. இஸ்ரேல் பார்லிமென்டில் நெதன்யாகு கொடுத்த அதிரடி அப்டேட்..!