லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடும் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், லெபனானின் முக்கிய கடலோர நகரான டயர் (தைர்) பகுதியில் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் படை முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியேறுமாறு அறிவித்திருந்த நிலையில், பின்னர் கனமான தாக்குதல் நடைபெற்றது. இதில் பல குடியிருப்புகள் மற்றும் வீடுகள் முழுமையாகத் தகர்க்கப்பட்டன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஐந்து பொதுமக்கள் மற்றும் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லெபனான் அரசு ஊடகங்களும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளன. இதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஹிஸ்புல்லா லெபனானின் தெற்கு எல்லைப்பகுதியில் இருந்து ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்யின் அடுத்த டெல்லி பயணத்தில் ராகுல் காந்தியுடன் சந்திப்பு இருக்கும்! பிரவீன் சக்கரவர்த்தி உறுதி!

இந்த நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் வாஷிங்டன் டி.சி.யில் நாளை (வெள்ளிக்கிழமை) முதன்முறையாக பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் இந்தப் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பு இந்தப் பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னரே டயர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த மோதல் தொடர்ந்து நீடித்தால் லெபனான் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக பார்வையாளர்கள் அஞ்சுகின்றனர். இரு தரப்பு தாக்குதல்களும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், சர்வதேச சமூகம் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அடுத்த கட்ட வளர்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: நாளை முதல் களத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை..!! பிரம்மாண்ட தொடக்கம்..!!