மேற்கு ஆசிய நாடுகளாக இருக்கும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல்கள் உள்ளன. காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் காசாவில் புகுந்து ஹமாஸ் படையினரை துவம்சம் செய்துகொண்டு இருக்கிறது.
ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக உள்ள ஈரான் கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல், இரண்டு தினங்களுக்கு முன் அந்நாட்டின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து திடீர் விமான தாக்குதல் நடத்தியது.200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் நாடு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம் முதல் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் வரை அனைத்தையும் இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்தன. ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி மற்றும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முக்கிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். இது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது,.
இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து. இஸ்ரேலை அழிக்க ஈரான் அதனுடைய ஏவுகணை ஆயுதக் கிடங்களை அதிகரிக்க அவசரமுடன் செயல்படுகிறது. அந்த நாடு அடைய விரும்பும் அணுசக்தி வலிமையை எந்த நாடும் தாங்க முடியாது. இதனால்தான் இஸ்ரேல் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதலை நடத்த வேண்டி இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். தற்போது இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரானின் பலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இஸ்ரேலிடம் இருப்பது போல ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இது பிடிக்கவில்லை. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால், தங்கள் மக்களுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதின.இது தொடர்பாக ஈரானை தொடர்ந்து எச்சரித்தன. அமெரிக்காவுடன் ஈரான் நடத்திய பேச்சும் தோல்வியில் முடிந்தது.
சந்தர்ப்பம் தேடி காத்திருந்த இஸ்ரேல் சமீபத்தில் ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், அன்டர் கிரவுன்ட் ஆராய்ச்சி கூடங்களை குண்டு வீசி தகர்த்தது. ஈரானின் ராணுவ தளங்களையும் நொறுக்கியது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, ஈரானின் அனைத்து ராணுவ படைகளின் தளபதி முகமது ஹூசைன் பகேரி, புரட்சிகர காவல் படை தளபதி சலாமி உட்பட 3 தளபதிகளையும், 2 அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்றது.

கடைசி 45 ஆண்டுகளில் ஈரான் பார்த்திருக்காத கொடிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஈரான் அணுஆயுத பலத்தை கூட்டியதே காரணம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரானிடம் இருக்கும் யுரேனியம், எத்தனை நாட்களில் அந்த நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவர்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன்படி, ஈரான் இடம் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டரை நாட்களில் ஒரு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும். 11 நாட்களில் ஐந்து அணுகுண்டுகளை தயாரித்து விடலாம். இதே போல ஒரு மாதத்தில் 11 அணுகுண்டு, மூன்று மாதத்தில் 19 அணுகுண்டு, ஐந்து மாதத்தில் 22 அணுகுண்டுகளை ஈரான் தயார் செய்து விட முடியும்.

அந்த அளவுக்கு அந்த நாட்டிடம் தொழில் நுட்பமும், மேம்படுத்தப்பட்ட யுரேனியமும் இருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி உறுதியான தகவல்கள் கிடைத்த நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலை துவங்கி உள்ளது. எனினும், ஈரான் ஒருமுறை கூட தான் அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கத்துடன் யுரேனியம் மேம்படுத்துவதாக தெரிவிக்கவில்லை. அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?