இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் பொதுமக்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து ஈரான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் செயல்பட்ட காஷ்மீர் மக்கள், தங்களிடம் இருந்த வளங்களை விருப்பத்துடன் வழங்கினர். உடலில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி முதல், வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் வரை சேகரித்து, அவற்றை ஈரான் மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொருளாதார நிலைமையை பொருட்படுத்தாமல், மனித நேயம் மேலோங்கி செயல்பட்ட இந்த உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இந்த அன்பான செயலை பாராட்டிய இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், காஷ்மீர் மக்களிடமிருந்து கிடைத்த உதவிப் பொருட்களின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. அதனுடன், “இக்கட்டான சூழலில் ஈரான் மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்த காஷ்மீரை சேர்ந்த அன்பு நிறைந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம். இந்தியாவுக்கு நன்றி” என்று பதிவு செய்திருந்தது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!
ஆனால், இந்த பதிவு வெளியான சில நேரங்களிலேயே திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாகிஸ்தானை சேர்ந்த சமூக வலைதள பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்பதும் தகவலாக வெளிவந்துள்ளது.
இந்த எதிர்ப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலேயே ஈரான் தூதரகம் தனது பதிவை நீக்கியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மனிதாபிமான உதவியைச் சுற்றியுள்ள இந்த சர்ச்சை, தற்போது இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!