பாகிஸ்தானின் லாகூர் நகரில் பழைய ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் கால சாலைப் பெயர்களை மீண்டும் கொண்டு வர முயன்ற திட்டம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த திட்டத்தை பஞ்சாப் மாகாண அரசு தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூர், வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்டதாக கூறப்படும் இந்த நகரம், முகலாயர், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலங்களில் முக்கிய தலைநகராக இருந்தது. 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், லாகூர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதன் பிறகு நகரின் பல சாலைகள் மற்றும் பகுதிகளில் இருந்த ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் பெயர்கள் நீக்கப்பட்டு, இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நபர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.

இந்நிலையில், லாகூர் பாரம்பரிய பகுதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நகரின் வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பழைய பெயர்களை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான குழுவும், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!
அதன்படி, இஸ்லாம்புரா பகுதியை மீண்டும் கிருஷ்ணா நகர் என்றும், மவுலானா ஜபர் அலி கான் சவுக் பகுதியை லட்சுமி சவுக் என்றும், பாப்ரி மசூத் சவுக் பகுதியை ஜெயின் மந்திர் சாலை என்றும், முஸ்தபாபாத் பகுதியை தர்மபுரா என்றும் மாற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்த முடிவுக்கு பல முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைதளங்களிலும் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வேகமாக பரவின. வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது என்றும், இது மத உணர்வுகளை பாதிக்கும் என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து நிலைமை மேலும் பதற்றமடையாமல் இருக்க, ஹிந்து பெயர்கள் மீண்டும் சூட்டும் திட்டத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பாகிஸ்தானில் அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!