சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்கா அருகே ஹவுதிகள் ஏவியதாகக் கூறப்படும் ட்ரோனை சவுதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
சவுதி தரப்பு வெளியிட்ட தகவலின்படி, மெக்காவின் தெற்குப் பகுதியில் பறந்து வந்த ட்ரோன், புனித நகரத்துக்கான தடை செய்யப்பட்ட வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே சவுதி வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ட்ரோன் மாலை 6.50 மணியளவில் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்கா மற்றும் இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாப்பு தங்களுக்கு “சிவப்பு கோடு” என சவுதி தரப்பு எச்சரித்துள்ளது. வழிபாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் புனித நகரத்திற்கு குறி... மெக்கா நோக்கி சீறி பாய்ந்த ஹவுதி ட்ரோன்... நடந்தது என்ன?

2017-ம் ஆண்டில் மெக்காவை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய சம்பவம் மெக்காவை குறிவைத்ததாகக் கூறப்படும் இரண்டாவது முயற்சி என சவுதி தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, மெக்காவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி தரப்பு கூறுவதை ஹவுதி அமைப்பு மறுத்துள்ளது. எனவே, ட்ரோனின் துல்லியமான இலக்கு குறித்து இருதரப்பினரிடையேயும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப நாட்களில் சவுதி அரேபியாவின் பல பகுதிகளை நோக்கி ஹவுதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மெக்கா, ஜெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மெக்கா அருகே நடைபெற்றுள்ள இந்த புதிய சம்பவம், ஏற்கனவே பதற்றமான மத்திய கிழக்கு சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!