ஸ்பெயின்–மொராக்கோ எல்லையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அகதிகள் திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில், ஏற்பட்ட கடும் நெரிசல், மோதல் மற்றும் கடல் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சிறந்த வாழ்க்கையை தேடி ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா நகரை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கதேசம் திரும்பினால் கைது! ஷேக் ஹசீனாவுக்கு புதிய சிக்கல்!! அமைச்சர் விடுத்த கடும் எச்சரிக்கை!
சமீபத்தில், கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, மனிதக் கடத்தல் கும்பல்கள் பரப்பிய தகவல்களை நம்பி ஏராளமானோர் எல்லையை நோக்கி திரண்டதாக கூறப்படுகிறது.

சியூட்டா எல்லைப் பகுதியில் தடுப்பு வேலியை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கடக்க முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம், மொராக்கோ பாதுகாப்புப் படையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியதுடன், தடியடியும் நடத்தினர். அச்சத்தில் பலர் கடலில் குதித்து தப்ப முயன்ற நிலையில், சிலர் நீரில் மூழ்கியும், பலர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான மெலில்லாவிலும் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இந்த சம்பவங்களுக்கு மனிதக் கடத்தல் கும்பல்களே முக்கிய காரணம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, எல்லையை நோக்கி வந்த சுமார் 60 ஆயிரம் பேரில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகதி நெருக்கடியைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் தங்களது எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளன. ஐரோப்பாவில் அகதி பிரச்சினை மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மோதலில் புதிய திருப்பம்! எகிப்து துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்!! சர்வதேச பரபரப்பு!