தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தத் திட்டம் இதுவரை முதன்மை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்த விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.முதலில் இத்திட்ட விரிவாக்கம் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால் முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருந்ததால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அன்று முதல் சில மாவட்டங்கள் தவிர்ந்து மாநிலம் முழுவதும் இந்த விரிவாக்கம் அமலுக்கு வரும்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள். மொத்தம் சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்கிறது. இதற்கு முன் பயன் பெற்று வந்த மாணவர்களுடன் சேர்த்து மொத்தம் சுமார் 34.64 லட்சம் மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு கிடைக்கும்.சென்னை மாநகராட்சி வரம்பில் உள்ள 447 பள்ளிகளில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அருகிலுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 பள்ளிகளில் நகராட்சி நிர்வாக இயக்ககம் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் செயல்படும்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!
கிராமப்புறங்களிலும் அருகிலுள்ள பேரூராட்சிகளிலும் உள்ள 12,857 பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் வழியாக சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பள்ளிகளிலேயே உணவு தயாரித்து வழங்குவார்கள்.இத்திட்டத்தின் தற்போதைய மெனு, செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு முறை ஆகியவை மாற்றமின்றி தொடரும். வார நாட்களில் உப்புமா, கிச்சடி அல்லது பொங்கல் வழங்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி சேர்க்கப்படும். சிறுதானிய அடிப்படையிலான உணவுகள் வாரத்திற்கு இருமுறை இடம்பெறும். உணவு சுகாதாரமாகவும், சூடாகவும், சுவையாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாது. அங்கு நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் காரணமாக நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் இவ்விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்தே திட்டம் செயல்படத் தொடங்கும்.
இதையும் படிங்க: ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? மீனவ மக்களுக்கு துரோகம்... அப்பாவு காட்டம்..!!