இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானை தாக்கி உள்ள நிலையில் ஈரான் அதற்கு பதிலடி தந்து வருகிறது. சனியன்று, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. ஈரான் சமாதானத்துக்கு வராவிட்டால் தாக்குதல் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்த ஈரானின் உச்ச தலைவர் கமேனி அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது என்றார்.
இச்சூழலில், ஆபரேஷன் பெஷாரத் ஃபடா (Operation Besharat Fatah) பெயரில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து 6 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத ஈரான், அந்த நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள அல் உதெய்த் விமான தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அங்குதான் சுமார் 10,000 துருப்புகளை அமெரிக்கா நிலை நிறுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மூக்கறுபட்ட ட்ரம்ப்!! இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? அமெரிக்க அதிபரை அசால்ட்டாக தட்டிவிட்ட ஈரான்..!

இது, மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிலை. அந்த பிராந்தியம் முழுவதுமான ராணுவ நடவடிக்கைகளுக்கு இது முக்கியமான மையமாக செயல்படுகிறது. ஈரான் ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் வழிமறித்து முறியடித்து வருகின்றன. சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியகவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியா தனது வான்வெளியை மூடியது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அலுவலகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் மிகவும் பலவீனமானது. ஈரானின் 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் அணுசக்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தினோம். இதற்கு, அமெரிக்கா மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் பலவீனமானது. அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அதை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். ஈரான் ஏவிய 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஒரு ஏவுகணை விடுவிக்கப்பட்டது. அது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை. எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை. எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். தாக்குதல் நடத்த போகிறோம் என்பதை எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் யாரும் உயிரிழக்கவோ, யாரும் காயமடையவோ இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருவழியாக ஓய்ந்தது சண்டை! இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்? ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!