அணு ஆயுதத்தைக் காட்டி மிரட்டுவதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. இது மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளின் போரில் ஈரானஏ அதிக பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத விஷயத்தில் ஈரான் நிபந்தனை ஏதும் இல்லாமல் சரண் அடைய வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.
அமெரிக்காவின் கட்டளையை ஏற்க முடியாது. ஈரான் மக்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டார்கள் என ஈரான் ஆட்சியாளர் ஆயத்துல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனால் கடுப்பாகி உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டங்களுக்கு டிரம்ப் ஒப்புதல் தந்துள்ளார். ஈரானின் அணு உற்பத்தி மையமான ஃபோர்டோவை தாக்குவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இருந்தாலும் இறுதி முடிவை அவர் இன்னமும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!
இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் கூறும்போது, அதை நான் செய்யலாம் அல்லது செய்யாமலும் போகலாம் என்றார். தெஹ்ரானில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிரம்ப் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் இருக்கும் என்கிறார்கள். இந்தியா உள்பட மற்ற நாடுகளும் அவர்களுடைய குடிமக்களை ஈரானை விட்டு வெளியேற தூதரகங்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.
இது ஒரு புறம் இருக்க ஈரான் பகுதிகளில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. USS நிமிட்ஸ் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்டவை இந்தப் படையில் இடம் பெற்றுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க-பிரிட்டிஷ் ஏவுதளம் உள்ளது.

அங்கும் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அங்கிருந்து விமானங்கள் ஈரான் மீது குண்டுகள் வீசப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: போரில் வெளிப்படும் குரூர முகம்.. ஈரானின் இரக்கமற்ற செயலால் கொதிப்பில் இஸ்ரேல்..!