அமெரிக்க அதிபராக 2 வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்கர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முடிவுகளை எடுப்பதாக கூறினார். அந்த வகையில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் என அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதிப்பை அறிவித்தார். அமெரிக்க தயாரிப்புகளை குறைவாக வாங்கும் சில நாடுகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் பொருட்கள், சரக்குகளை ஏற்றுமதி செய்கின்றன. அப்படிப்பட்ட நாடுகள் மீது அதிக வரியை விதித்தார் டிரம்ப்.

இதனால் அந்த நாடுகள் மட்டுமல்ல, அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களும் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்நிலையில், டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: க்ளாஸ் கட் அடிச்சா இனி அவ்ளோ தான்.. இந்தியா மாணவர்களுக்கு ட்ரம்ப் வைத்த செக்..!
இந்த வழக்கை 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. அப்போது, அமெரிக்க அரசின் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தகம் சீரற்ற நிலையில் உள்ளது. அதை சரிப்படுத்தத்தான் பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்கு தடை விதித்தால் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகம் மீண்டும் சீரற்ற நிலைக்கு போய் விடும்.

அதிபர் டிரம்ப் தனக்குள்ள வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்துத்தான் இந்தியா, பாகிஸ்தான் போரையே நிறுத்தினார். வரி விதிப்புக்கு தடை விதித்தால் அணு ஆயுத நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு விடும் என அமெரிக்க அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தேசிய அளவில் நெருக்கடியான சூழல் ஏற்படும் போது, வரி விதிப்புகளை ஒழுங்குப்படுத்தி அமைக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு IEEPA சட்டம் வழங்கியுள்ளது.
பல நாடுகளுடன் வரி விதிப்பு பற்றி பேச்சு நடத்தி வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், வரி விதிப்புக்கு தடை விதிக்கக்கூடாது எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அமெரிக்க அரசின் அனைத்து வாதங்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: IEEPA சட்டத்தின் கீழ், அதிபருக்கு எல்லையற்ற அதிகாரத்தை அமெரிக்க பார்லிமென்ட் வழங்கவில்லை. அமெரிக்க பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில், பொருளாதார தடைகளை விதிக்கும் அதிகாரத்தைத்தான் IEEPA சட்டம் அதிபருக்கு வழங்குகிறது.

அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியில் பிரச்னை ஏற்படும்போது அதை சரி செய்து அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரத்யேக அதிகாரத்தை அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் பார்லிமென்ட்டுக்குத்தான் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தை அதிபர் பறிப்பதை கோர்ட் அனுமதிக்காது.
IEEPA சட்டம் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதாக கூறுவது தவறு. அதிபருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கினால், அது, பார்லிமென்ட்டின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறித்து விடும் அபாயம் இருக்கிறது.

அமெரிக்க பொருளாதாரத்தை சீரமைக்க வரி விதிப்பை அதிபர் பயன்படுத்தினார் என அரசு வாதத்தை முன்வைக்கிறது. அது தவறான வாதம். அதிபர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். வரி விதிப்பு விஷயத்தில் அரசின் நோக்கம் என்ன? வரிவிதிப்பால் விளையும் நன்மைகள் என்ன? என்பதை பற்றியெல்லாம் கோர்ட் கருத்தில் கொள்ளப்போவதில்லை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அதிபர் வரி விதிதுள்ளார். அவர் செயல் சட்டவிரோதமானது. எனவே, அதிபரின் வரி விதிப்பு அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,