ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது.

பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்பு படையில் கருப்பு ஆடு.. ராணுவ தகவல்கள் கசிந்தது இப்படி தான். பாக்.-க்கு உளவு பார்த்த CRPF வீரர் கைது..!
இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இந்தியா தனது எண்ணத்தில் உறுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம்.
மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம். சமாதான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியா உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள் என்பதைக் காண்பிப்பார்கள். இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு வெற்றி அடைந்தது என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: என் ரத்தம் கொதிக்குது..! கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. குஜராத்தில் மோடி ஆவேசம்..!