மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசு நக்சல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியை இறுதி காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கட்சிரோலி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்தது.
உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்ற கமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படையினரை கண்டதும் நக்சல்காரர்கள் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து AK-47 உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், நக்சல் இலக்கியங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உங்க பப்ளிசிட்டிக்கு கோர்ட்டை யூஸ் பண்ணாதீங்க! பிரசாந்த் கிஷோருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
இந்த என்கவுன்டரில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, விமானம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை நிலையானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு கட்சிரோலி வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நக்சலைட்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் உறுதியான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்தி வரும் இந்த பெரும் நடவடிக்கை, மார்ச் 31-க்குள் நக்சல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் நக்சலைட்டுகள் பலர் என்கவுன்டரில் கொல்லப்பட்டு வருவதால், அவர்களின் நெட்வொர்க் பெரிதும் பலவீனமடைந்துள்ளது.
பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயல்பாட்டுக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவை கழட்டிவிட்டு வெனிசுலாவிடம் ஐக்கியம்! இந்தியாவின் உள்ளே வெளியே கேம்! ட்ரம்ப் அழுத்தமா?