இந்தியாவின் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டில் ரூ.347.69 கோடியாக இருந்த மாநில அரசியல் கட்சிகளின் மொத்த நன்கொடை, 2024-25ல் ரூ.1,051.56 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று திமுக முதலிடத்தில் இருப்பதாக ADR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ADR, தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் அறிக்கைகள் மற்றும் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெறும் தகவல்களை ஆய்வு செய்து, அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25ல் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு
அதன்படி, 2024-25ல் திமுக ரூ.365.78 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.300.64 கோடி, அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்ததாக ADR தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநில கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக திமுக முதலிடத்தில் உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் ரூ.184.96 கோடி நன்கொடையுடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரூ.140.04 கோடி நன்கொடையுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.100.19 கோடி நன்கொடை பெற்று தெலுங்கு தேசம் கட்சி முதலிடத்தில் இருந்ததாகவும் ADR தெரிவித்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, அடுத்த நிதியாண்டில் மாநில கட்சிகளின் நன்கொடை தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.
திரிணமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகளை அதிகளவில் சார்ந்திருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மாநில அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை 2023-24ல் ரூ.227.61 கோடியாக இருந்த நிலையில், 2024-25ல் ரூ.644.93 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், ‘ப்ரூடன்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ தொடர்ந்து மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்ததாக ADR தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து இந்த அமைப்பு ரூ.434 கோடி வழங்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் மற்றும் நன்கொடை விவரங்கள் தொடர்பான இந்த புள்ளிவிவரங்கள், அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் பெருநிறுவன நன்கொடைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! அடுத்த நொடியே மைக் ஆஃப்... சட்டசபையில் பரபரப்பு