குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனட நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அகமதாபாத்தினுடைய மேக்காணி என்று சொல்லக்கூடிய நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, 10 விமான பணியாளர்கள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த 242 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: தாய்லாந்து பாடகரையும் காப்பாற்றிய 11A.. அதிகம் வெறுக்கப்பட்ட சீட் அதிர்ஷ்டமானதாக மாறியது எப்படி?
விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்த 10 மருத்துவர்கள் உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 13 பொதுமக்களும் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 24 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்கள் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடித்து நேற்று முன்தினம் 6 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக டி.என்.ஏ. சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை, உடல்களை எடுத்துச் செல்லுதல் ஆகிய பணிகளில் மருத்துவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டவர்களின் சடலங்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த விமான விபத்து குறித்து பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். முன்னதாக விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டு இருந்தது. அதை ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!