குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜூன் 12ல் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 274-ஆக அதிகரித்திருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் மரணம் அடைந்தனர். விமானம் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த பி.ஜெ. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் பெரும் சேதம் அடைந்தது. விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், சமையல் செய்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். விடுதியில் 33 பேர் இறந்திருப்பது உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பிஜெ மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மீனாக்ஷி பரிஹ் (Dr.Minakshi Parikh) கூறியதாவது ; முதல் ஆண்டு மாணவர்கள் 250 பேரில் 2 பேர் இறந்தனர். 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 11 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 249 பேரில் 2 மாணவர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். மேலும் 3 பேருக்கு சிறிய காயங்கள் மட்டும் உள்ளன.
இதையும் படிங்க: ஆமதாபாத் விமான விபத்து.. இன்று குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைப்பு..!
3ம் ஆண்டு மாணவர்கள் 253 பேர். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. தயவு செய்து மருத்துவ மாணவர்கள் இறப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். 2 மாணவர்கள் காணவில்லை என தேடினோம்.
அவர்களும் கிடைத்துவிட்டனர். பாதுகாப்பாக இருக்கின்றனர். சமையல் செய்யும் சரளா என்ற பெண்ணும், அவருடைய பேத்தி ஆதயா என்பவரும்தான் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடி வருகிறோம் என கல்லூரி டீன் டாக்டர் மீனாக்ஷி பரிஹ் தெரிவித்தார்.

இதுவரை ஒட்டுமொத்தமாக 32 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதில் 20 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டதாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார்.

இன்று காலை 11.10 மணி அளவில் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது என்றும் கூறினார்.
இது குறித்து குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்ததாவது; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். அவரது உடலை எப்போது மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தாய்லாந்து பாடகரையும் காப்பாற்றிய 11A.. அதிகம் வெறுக்கப்பட்ட சீட் அதிர்ஷ்டமானதாக மாறியது எப்படி?