ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கும் முன்னரே, பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகளை மட்டுமே தாக்கப் போகிறோம். ராணுவத்தை தாக்கப்போவது இல்லை. ராணுவம் விலகி இருக்கலாம் என்று பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பினோம். அந்த அறிவுரையை பாகிஸ்தான் கேட்வில்லை என்று கடந்த மே 17ம் தேதி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இதற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்தார். தாக்குதல் தொடங்கும் முன்பே பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இந்திய அரசு அப்படி செய்ததாக வெளியுறவு அமைச்சர் பொது வெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு யார் அனுமதி கொடுத்தது. இந்த சண்டையில் நாம் எத்தனை விமானங்களை இழந்தோம் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு கரிசனம் காட்டிய கொலம்பியா.. கொதித்தெழுந்த சசிதரூர்.. தெறிக்கவிடும் பேச்சு..!

தெலங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே நிஜாம்பேட் பகுதியில் நேற்று காங்கிரஸ் சார்பில் ஜெய்ஹிந்த் யாத்திரை நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 4 நாள் சண்டைக்கு பிறகு என்ன நடந்தது? யார் சரண் அடைந்தார்கள்?, அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார். இந்தியா அறிவிக்கவில்லை. உங்களுக்கு தேவைப்படும் போது எங்களை அழைத்தீர்கள். நாங்களும் ராணுவத்துடன் நின்றோம். சண்டை நிறுத்திய போது எங்களிடம் அது குறித்து சொல்லவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தால் எத்தனை ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டன? ஏன் யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை? அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க கோரிக்கைகள் வந்த போதிலும், அரசாங்கம் அதை செய்யத் தவறிவிட்டது. ராகுல் பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அவர் மீண்டும் இந்தியாவுடன் இணைத்திருப்பார் என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

ராகுல் மற்றும், ரேவந்த் ரெட்டிக்கு பதில் அளித்து பாஜ எம்.பி. சம்பித் பத்ரா கூறியதாவது ; தேசத்துடன் நிற்பதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் அதன் தலைவர்கள் ராணுவத்தை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். இந்தியா 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தானில் 11 விமான தளங்களையும் அழித்தது. அதற்கு ஆதாரமாக தெளிவான செயற்கைக்கோள் படங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் ராகுல், ரேவந்த் ரெட்டி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என கேள்வி எழுப்புகின்றனர். ஒரு ரஃபேல் விமானம் விபத்துக்கு உள்ளானால் அது நொறுங்கியதற்கான ஆதாரங்கள் செயற்கை கோள் மூலம் கிடைத்துவிடும். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. காங்கிரசில் இப்போது இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறது. மற்றொரு பிரிவு இந்தியாவுடன் நிற்க விரும்புகிறது என சம்பித் பத்ரா தெரிவித்தார்.

பாஜ தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது ; ராகுலுக்கு பிறகு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தான் எத்தனை ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என கேட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இந்த தலைவர்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறார்கள் என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.
பாகிஸ்தான் உண்மையில் ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருந்தால் செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதாரங்கள் கிடைத்திருக்கும். பாகிஸ்தான் கேட்க விரும்புகின்ற கேள்விகளை காங்கிரஸ் கேட்கிறது. அவர்கள் அறியாமையால் எதிரிகளின் கைகளில் விளையாடுகின்றனர். நாட்டின் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு பதில் பாகிஸ்தானின் மக்கள் தொடர்பு குழுவாக காங்கிரஸ் இருப்பது போல தெரிகிறது என அமித் மாளவியா தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!