பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான நம் முப்படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை பாராட்டி, தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டில் ஜெய் ஹிந்த் யாத்திரை நடந்தது. இதில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உட்பட ஏராளமான காங்கிரசார் தேசிய கொடி ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். பின் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

இந்தியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் முன், பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பயங்ரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் பூரண ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு, தெலங்கானாவின் 4 கோடி மக்கள் துணை நிற்பதாக நான் கூறினேன். தாக்குதலை துவங்கும் முன் அனைத்து கட்சி கூட்டம் கூட்டிய மோடி, யாரிமும் கூறாமல் சண்டையை நிறுத்தியது ஏன்?
இதையும் படிங்க: பிரமோஸ் ஏவுகணையால் எங்க திட்டம் மண்ணாப்போச்சு! அஜர்பைஜானில் கதறிய பாக்., பிரதமர்..!

இந்தியா - பாக்., சண்டை நிறுத்தம் பற்றிய தகவலை முதலில் அமெரிக்க அதிபர் வெளியிடுகிறார் என்றால் நம் பிரதமருக்கு என்ன மரியாதை? நம் நாட்டிற்குத் தான் என்ன கவுரவம்? பிரதமர் மோடி ஒரு செல்லாத காசாகிவிட்டார். செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு போல் அவர் உள்ளார். எனவே, அவரை நம்பி இனியும் பலன் இல்லை.
இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு, காளியின் வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக ஆக்கி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பார்.

துணிச்சல் மிக்க வீர மங்கை முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரன் ராகுல் நாட்டின் பிரதமர் ஆனால், பாகிஸ்தான், சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரின் பகுதிகள் மீட்கப்படும். அவர் தன் பாட்டியை போல் துணிச்சலுடன் செயல்படுவார் என ரேவந்த் ரெட்டி கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் மோடி அரசாங்கம் பாகிஸ்தானுடான போரை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த ரஃபேல் போர் விமானங்கள், எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எந்த விவாதமும் இல்லை. வேறொரு நாட்டிலிருந்து போர் விமானங்களை வாங்கிய பிரதமர் மோடி, எத்தனை ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று பதிலளிக்க வேண்டும்.
உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கினீர்கள், ஆனால், அவை ஏன் அழிக்கப்பட்டன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவா இருந்தாலும் அனுமதிக்க முடியாது! இந்தியா - பாக்., விவகாரத்தில் ரன்தீர் ஜெய்ஸ்வால் தடாலடி..!