மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் (ஆர்.கேஏபி), அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி, அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் முன்னாள் குழு நிர்வாக இயக்குநர் சதீஷ் சேத் மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது புதிய முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு (எல்.ஐ.சி) சுமார் ரூ.2,684.57 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்.ஐ.சி அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2012 ஏப்ரல் 12 முதல் 2018 மார்ச் 9 வரை எல்.ஐ.சி, ரிலையன்ஸ் கேபிட்டல் வெளியிட்ட ஐந்து மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் (என்.சி.டி) மொத்தம் ரூ.3,900 கோடி முதலீடு செய்தது.
பொது நிறுவன நோக்கங்கள், நிதி தேவைகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களை மறுநிதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக இந்தத் தொகை திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.ஆனால் குற்றச்சாட்டின்படி, குற்றவாளிகள் தவறான தகவல்கள் மூலம் எல்.ஐ.சியை முதலீடு செய்யத் தூண்டி, பின்னர் அந்த நிதியை முறைகேடாகத் திசைதிருப்பினர். இதனால் எல்.ஐ.சிக்கு ரூ.2,684.57 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு இணையான லாபம் குற்றவாளிகளுக்கும் பிற பயனாளிகளுக்கும் கிடைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சுஷாந்த் சிங் பெண் மேலாளர் மர்ம மரணம்! ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, நிதி திருப்புதல், கணக்குகள் போலியாக்கம் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அனில் அம்பானி தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. “இந்த எஃப்.ஐ.ஆர் ரிலையன்ஸ் கேபிட்டல் தொடர்பானது. அனில் அம்பானி 2005 முதல் 2021 நவம்பர் வரை நிறுவனத்தின் போர்டில் தலைவராக/செயல்படா இயக்குநராக இருந்தார். அப்போது ரிசர்வ் வங்கி போர்டை ரத்து செய்து நிர்வாகியை நியமித்தது. எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை” என்று அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கேபிட்டல் ஏற்கனவே திவால் நடைமுறையில் உள்ளது. அனில் அம்பானி மீது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தொடர்பான பல வங்கி மற்றும் எல்.ஐ.சி வழக்குகள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரின் பங்கையும் ஆராய்ந்து, நிதியின் இறுதிப் பயன்பாட்டைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்களின் காப்பீட்டுப் பணம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் கார்ப்பரேட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!