மத்திய அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, இனி அனைத்து துறைகளிலும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் என்ற நடைமுறை கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை, அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் அரசு பணியாளர் கார்களின் பயன்பாடு தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, ஒரு மூத்த அதிகாரி வேறு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் கூடுதல் பொறுப்பு வகித்தாலும், அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு வாகனங்களை ஒதுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த அதிகாரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த கேபினட் செயலர் யார்? பிரதமர் மோடியின் முக்கிய தேர்வு! மீண்டும் தமிழருக்கு வாய்ப்பு?!

மேலும், அலுவல் பணிகள் அல்லது அரசு அனுமதி பெற்ற சுற்றுப்பயணங்களை தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது கூடுதல் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கு பதிலாக, அவற்றை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டை சீரமைப்பதன் மூலம் நிர்வாக திறனை அதிகரிக்கவும், போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக செலவினத்துறை தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகளுக்கான வாகன வசதிகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிமுறைகள் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிலும் கடுமையாக பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை? மத்திய அரசு கொண்டுவரும் புதிய மசோதா!