நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைச் சுற்றி சமூக வலைதளங்களில் பரவியதாகக் கூறப்படும் போலி தகவல்கள் தொடர்பாக டெல்லி போலீஸ் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் கண்டறியப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 480-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப நாட்களில் போராட்டம் தீவிரமடைந்ததாகவும், சில இடங்களில் போலீசாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டன.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் இருந்து சமூக வலைதளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக டெல்லி போலீஸ் விசாரணையில் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் 480-க்கும் அதிகமான கணக்குகள் இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் உதவி ஆணையர் சுமித் ஜா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொளியில், வெளிநாட்டு சமூக வலைதளக் கணக்குகள் பகிரும் தகவல்களை உண்மை என நம்பி பகிர வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை சரிபார்க்காமல் பரப்புவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சூழல்களில் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்கள் வேகமாக பரவக்கூடியதால், இணைய பயனர்கள் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகே பகிர வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. டெல்லி போலீசின் இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களில் போலி தகவல்களுக்கு எதிரான கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!” முதல்வர் விஜய்யை குறிவைத்து அதிமுக அதிரடி கேள்வி!